Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Tuesday, November 1, 2011

அந்நியன் - சிறுகதை

பெங்களுர், கலாசி பாளையத்தின் திப்பு சுல்தான் அரண்மனைச் சாலை, அதிகாலையிலேயே பரபரப்பாகிவிடும் . காரணம், அந்தச் சாலையில்தான் பெரும்பாலான தனியார் பேருந்து இயக்கும் அலுவலகங்கள் இருந்தன. அங்கு, மூன்று மணியிலிருந்து ஐந்து மணிக்குள் வந்து சேரும் பேருந்துகள் அதிகம். அவ்வேளையில், அந்தச் சாலையே பேருந்து நிலையம் போல் காட்சியளிக்கும்। இதன் பொருட்டுதான், தர்மசிவம் இங்கு இடம்பிடித்து, பெட்டிக்கடை வைத்துக் கொண்டார்.


கடலூர் மாவட்டத்தின் நெல்லிக்குப்பம் கிராமம் இவரது பூர்வீகம்.கடந்த ஏழு வருட பெங்களுர் வாசத்தால், கன்னட மொழியும் வசப்பட்டிருந்தது. கன்னடமென்ன பாதி தமிழ்தானே!பயண களைப்பு முகம் முழுக்க பரவிகிடந்த ஒருவர், தர்மசிவத்தின் கடையில் பொருள் வாங்க நின்றிருந்தவரிடம், ‘மும்பைக்கு இங்கிருந்து எந்த பஸ்ல போகலாம்?’ என்று ஆங்கிலத்தில் கேட்க, அந்த நபர் திருதிருவென விழித்தார்। ‘மும்பைக்கு போகணுமா? தோ…எதிர்த்தாப்பல இருக்கிற டிராவல்ஸ்க்கு போங்க। இன்னும் ஒரு மணி நேரத்துல ஏ।சி। வோல்வோ பஸ் இருக்குதுன்னு நினைக்கிறேன்” தர்மசிவம் வலிய மூக்கை நுழைத்து உதவினார். காரணம், அந்த ஆசாமியின் கையிலிருந்த ‘பாரதியார் கவிதைகள்’ காட்டிக்கொடுத்தது.இன்னும் சிலவற்றை தர்மசிவத்திடம் விசாரித்துக்கொண்டு அந்த நபர் நகர்ந்தபோது, ‘என்ன? உங்க ஊர்க்காரரா?’ என்று நக்கலாய் கன்னடத்தில் கேட்டான், சந்திரண்ணா.

சந்திரண்ணாவைப் பற்றி ஒரு சில விஷயங்கள் சொல்லியே ஆகவேண்டும். முப்பது வயது இளைஞன். நிரந்தரமான வேலை ஏதுமில்லாமல், வாரத்திற்கு ஒரு கடை: ஒருவிதமான வேலை என்று மாற்றிக்கொண்டே போவது அவனது வழக்கம். ஆனாலும், அவன் செய்யும் உருப்படியான ஒரே வேலை, அதிகாலை வேளையில், அந்த தெருவில் வந்திறங்கும் பயணிகளை கவர்ந்து, அவர்கள் தங்குவதற்கு விடுதிகளை கை காட்டிவிட்டு, கமிஷன் பெற்றுக்கொள்வதுதான். இவற்றையெல்லாம் விட, அவனுக்கு பிடித்த வேலை, வம்பு வளர்ப்பது.

ஒரு இளஞ்சோடி தர்மசிவத்தின் கடையில் வந்து நின்றது. அவன் செல்போனில் பேசியப்படி காலிடுக்கில் பெட்டியை திணித்துக்கொள்ள, அந்தப் பெண் இரண்டு கைகளையும் குறுக்கலாக்கிக் கட்டிக்கொண்டு நின்றாள். பெங்களுரின் அதிகாலை மென்குளிர் அனேகம்பேரை அப்படித்தான் நிற்க வைக்கும். ஒரு சில வினாடிகளில் செல்போனை துண்டித்துவிட்டு, தர்மசிவத்திடம் தண்ணீர் பாட்டில் கேட்டான். அப்படியே ‘இங்க…. பக்கத்துல ரூம் ஏதாவது கிடைக்குமா?’ என்று மலையாளம் கலந்த நெடியோடு விசாரித்தான்.“சந்திரா…” தர்மசிவம் குரல்கொடுத்தார். சந்திரண்ணா அவர்களை அழைத்துக்கொண்டு நகர்ந்தான்.

சந்திரண்ணாவிற்கு இயன்றவரை உதவுவார், தர்மசிவம். வேலை விஷயத்தில் கூட அவனுக்காக அவர் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அவன் அதையெல்லாம் வீணடித்துவிட்டு விதண்டாவாதம் பேசித்திரிந்தான்.அன்றும் வழக்கம்போல மூன்று மணிக்கெல்லாம் கடையை திறந்தார் தர்மசிவம். பேருந்துகளின் வருகை குறைவாக இருக்கக் கண்டதும் சந்தேகித்து, பக்கத்தில் விசாரித்தார்.‘ஒகேனக்கல் பிரச்சனையால, தமிழக பேருந்துகள் எல்லாம் ஓசூர்லேயே நிறுத்திட்டாங்க. எங்கப் பார்த்தாலும் ஒரே பிரச்சனையா இருக்குது. நீயும் பேசாம கடையை மூடிட்டு போயிடு’ – காரணத்தோடு அறிவுரையும் வந்தது.கர்நாடகாவில் உள்ள ஆறுகோடி பேரில், எழுவது லட்சத்திற்கும் அதிகமாக தமிழர்கள் வசித்து வருகிறார்கள். 29 மாவட்டங்களிலும் இவர்கள் பரவி இருந்த போதிலும், ஏதாவது ஒரு பிரச்சனை என்றால், ஒட்டு மொத்த தமிழர்களும் இன்னலுக்கு ஆட்படுவது இயல்பு.கடையை மூடிவிட்டுபோய்விடலாம் என்று முடிவெடுத்து முடிக்கும் நொடியில், நான்கைந்துபேர் ஒன்றாய் கூச்சலிட்டபடியே ஓடிவந்து தர்மசிவத்திடம் தகராறு செய்தனர். அந்தக் கூட்டத்தில் சந்திரண்ணாவும் இருந்தான். பேசிக் கொண்டிருந்த போதே ஒருவன் தர்மசிவத்தை நெட்டித் தள்ளினான். அவர் விழுந்து எழுந்து வருவதற்குள் கடையை அடித்து நொறுக்கினார் இருவர். சந்திரண்ணாவும் முழக்கமிட்டபடி ஒன்றிரண்டு பாட்டில்களைத் தூக்கிப்போட்டான்.தர்மசிவத்திற்கு சந்திரண்ணாவின் செய்கை அதிர்ச்சி தரவில்லை. ஏனெனில், அவனது கண்மூடித்தனமான இனவெறி அவருக்குத் தெரியும்.அந்தக் கூட்டம் அங்கிருந்து ஓடத்தொடங்கியபோது சந்திரண்ணாவும் கண்டுக்கொள்ளாமல் ஓடினான். இரண்டொரு அடியில் ஏதோ தடுத்தி கீழே விழுந்த சந்திரண்ணாவின் பின் மண்டையை சாலையோரம் கிடந்த சிமெண்ட் சிலாப் கிழித்தது. இரத்தம் கொடகொடவென கொட்டியது. கீழே விழுந்துவிட்ட இவனை கண்டுகொள்ளாமல், கூச்சலிட்டுக் கொண்டே அந்தக் கூட்டம் வேறொரு கடையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. அதிலும், தூரத்தில் போய் திரும்பி பார்த்த ஒருவன், சந்திரண்ணாவை செய்கை காட்டி ‘வா! வா!’ என்று அழைத்துக் கொண்டிருந்தான்.தர்மசிவம் ஓடிப்போய் சந்திரண்ணாவை தூக்கிக் கொண்டார். அருகாமையில் இருந்த இன்னொருவரின் உதவியோடு ஆட்டோவில் தூக்கிப் போட்டுக் கொண்டுபோய், அந்த தெரு முனையில் இருந்த பெங்களுர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த பொழுது முழு மயக்கத்திலிருந்தான் சந்திரண்ணா.

காலை ஆறு மணி. செய்தி அறிந்து மருத்துவமனைக்கு வந்த தர்மசிவத்தின் மகன் முகிலன், அந்த காட்சியைப்பார்த்து அதிர்ச்சியுற்று நின்றான். தர்மசிவம், சந்திரண்ணாவுக்காக இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்.“அப்பா… என்னப்பா இதெல்லாம்? இவனும்தான் உங்கள அடிக்க வந்தானாமே… மனசாட்சியே இல்லாம நம்ம கடைய உடைச்சியிருக்கிறான். இந்த நன்றிக் கெட்ட நாயிக்குப்போய்… ச்சே!” முகிலன் நெற்றியை பிடித்துக் கொண்டான்.“முகிலா… அப்படியெல்லாம் பேசாத. நல்ல பலமான அடி. அதிக இரத்தபோக்கு. உடனே இரத்தம் ஏத்தனுமுன்னாங்க. பி. பாஸிட்டிவ் குருப் இன்னாங்க. நானே குடுத்திட்டேன். எனக்குள்ளும் அவனுக்குள்ளும் ஓடுறது ஒரே இரத்தம்ன்னு கண் விழிச்ச பின்னே அவன் புரிஞ்சுகிட்டா சரி.ஏதோ பேச வந்த முகிலனை, பேசவிடாமல் தடுத்து தர்மசிவமே தொடர்ந்தார்.“டேய் முகிலா… தமிழர்களோட இரத்தம் கர்நாடகாவுல ஓடணும்ன்னு அவன் நினைக்கிறான். கன்னடனுக்குள்ளேயும் தமிழன் இரத்தம் ஓடட்டுமேன்னு நான் நினைக்கிறேன். அவ்வளவுதான். விடு, இதுக்குப்போய்….”கண்மூடிக்கிடந்த நிலையிலும், நீர்த்திவலைகள் கன்னங்களில் கோடுகிழித்தபடி உருண்டுக் கொண்டிருக்க, சந்திரண்ணா ஏதோ முனகினான்.“முகிலா… அவன், “யாதும் ஊரே யாவரும் கேளீர்ன்னு’ சொல்றாப்பல இல்ல” தர்மசிவம் கேட்டார்.

-புதுவைப்பிரபா-

ஏழையின் செல்வம் - சிறுகதை

வழக்கம்போல் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் தன் குடிசையைவிட்டு வெளியேறினான், தேசிங்கு। தற்செயலாய் தூக்கம் கலைந்ததும், தன் தந்தை புறப்படும் காட்சி கனகசபையின் விழித்திரையில் விழுந்தது. அடுத்தநொடி, அடித்து பிடித்து எழுந்து, "நைனா. . . . நைனா. . . . காசு கொடுத்துட்டு போ. . . நான்தான் நேத்து ராத்திரியே கேட்டேனே. . . . . கொடுத்துட்டுப்போ. . . "என்றான்.
பதில் ஏதும் பேசாமல், தேசிங்கு , வயல் சேலையில் ஜரிகையாய் ஓடும் ஒற்றையடிப்பாதையில் இறங்கி, விரைந்தான்.
"நைனா . . .. நான் இன்னா வாங்கித்துன்னவா கேக்கிறேன்? பொஸ்தகம் வாங்கனும்ன்னு தானே . . . இன்னிக்கும் நான் காசு கொண்டுபோய் கணக்கு வாத்தியாருகிட்ட குடுக்கலீன்னா. . . . பெறவு.. . . . பள்ளிக்கூடத்தில சேர்க்கமாட்டாரு.நைனா. . . . நைனா.. . . குடூ" தலையை சொறிந்துகொண்டே பின் தொடர்ந்தான், கனகசபை.
"அடிங்க . . . ஏதாவது கேட்க போறேன்டா. . . நான் தான் நேத்தே சொன்னேனில்ல . . . . என்னால காசு கீசு குடுக்க முடியாது. நீயும் இஸ்கூலுக்கு போக வேணாம். நானே அஞ்சாவது வரைக்கும்தானே படிச்சேன். அப்பால . . . நீ மட்டும் நெறைய படிக்கனும்ன்னு அடம் புடிச்சா? ஏழாவது வரைக்கும் படிச்சல்ல: அதுபோதும். இப்ப எட்டாங்கிளாசுக்கு நீ போறதாலதான அந்த வாத்தியான் காச கொடு, பணத்த குடுங்கிறான். நீ ஒன்னும் போகத்தேவையில்ல . . . . பெசாம, நாளையிலேர்ந்து என்கூட நீயும் ஓட்டலுக்கு வந்துடு, மொதாளிகிட்ட சொல்லி உனக்கு ஏதாவது எடுபுடி வேலைக்கு ஏற்பாடு பண்றேன். மாசம் நூறோ எறநூறோ . . . கிடைக்கும்"
சாதாரணமான வார்த்தைகளால் கனகசபையை சமாதானப்படுத்த முயற்சித்தான், தேசிங்கு. ஆனால் கனகசபையின் காதுகளில் அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அமிலமாய் விழுந்தது. அதில் அவனது கனவுக்கு மூச்சிதிணரல் ஏற்பட்டது.
"நைனா . . . ஒன்னால காசு தரமுடியாதுன்னு வேணா சொல்லு அதுக்காக . . . பள்ளிக்கூடத்தவிட்டு நிக்க சொல்லாதே. நான் படிப்பேன் . . . பெரிய படிப்பெல்லாம் படிப்பேன் . . . நீ ஒன்னும் தரவேணாம், பாஞ்சிருவாதானே பிச்ச எடுத்தாவது அந்த புஸ்தக காச நான் வாத்தியார்கிட்ட கொடுத்துட்டு. . . படிக்கிறேனா இல்லையான்னு பாரு. . . " துக்கம் அடைக்க தழுதழுத்து வந்து விழுந்தது வார்த்தைகள். தன் தந்தையிடம் எந்த பதிலையும் எதிர்பார்க்காமல், திரும்பி நடக்க தொடங்கினான். தந்தையும் பிள்ளையும் தற்போது எதிர்எதிர்திசையில். நடையிலும் , எண்ணத்திலும்.
தேசிங்கு, 'ஆளைவிட்டால் போதும்' என்கிற போக்கில் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாம் நடந்து பேருந்து நிறுத்தத்தை அடைந்தான். தன் கிராமத்தின் வழியாக நகரத்திற்கு செல்லும் முதல் பேருந்து சரியான நேரத்திற்கு வந்ததும் அதில் ஏறி அமர்ந்து பயணித்தான்;.
தேசிங்கு - நகரத்தில் இருக்கும் ஒரு பிரபல ஓட்டலில் சர்வர். காலை ஆறு மணியிலிருந்;து இரவு பதினோருமணிவரை வேலை. ஆயிர ரூபா சம்பளம். வயல்வேலைக்கு சென்று பொருளாதாரத்தை ஈடுகட்ட உதவும் தாரம். ஒரு மகள் , ஒரு மகன்; மகன் கனகசபை மூத்தவன்.



மாலை ஆறு மணி
டிபன் நேரம் என்பதால் ஓட்டலில் கூட்டம் வழிந்தது. வழக்கமான வேலைகளில் இருந்தான் தேசிங்கு. அந்த டேபிளில் தண்ணி டம்ளர் கொண்டுபோய் வைத்துவிட்டு, "சார் . . . . உங்களுக்கு என்ன வேணும்"என்றான். அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு, "சூடா என்னப்பா இருக்கு"என்றார் அந்த பேண்ட் சர்ட் மனிதர்.
தேசிங்கின் சமவயதுகாரர் அப்படி பார்த்தது அவனுக்குள் எந்த கேள்விகளையும் எழுப்பவில்லை. ஏனெனில் அவனுக்கும் அவரை அப்படி பார்க்கத்தோன்றியது.
"சூடா । . போண்டா. . .ஆனியன் பஜ்ஜி. . . மசால்வடை . . . ரோஸ்ட். . "நீட்டிக்கொண்டேபோனான்.
"ஒரு செட் போண்டாவும் . . . ஸ்ட்ராங்கா ஒரு காப்பியும் . . . "அந்த மனிதர் ஆர்டர் கொடுத்தார்.
தேசிங்கிற்கு சாடாரென ஒரு கேள்வி எழுந்து மறைந்தது. பரிமாறும்போது அந்த நபரிடம் அதை கேட்டுவிடும் முடிவொடு இருந்தான், போண்டாவோடு அந்த டேபிளுக்கு அருகில் தேசிங்கு சென்றதும் , அவர் கேட்டார்
"உங்க பேரு . . . . தேசிங்குதானே?"
"நீங்க . . . ரவிதானே.. . . "பதிலுக்கு தேசிங்கு
தேசிங்கும் ரவியும் ஐந்தாவது வரை ஒன்றாக படித்தவர்கள் ரவியின் அப்பா ஒரு கட்டிடக் கூலித் தொழிலாளி. வேறொரு ஊரில் பாலங்கட்டும் வேலைக்காக போகையில் அந்த கிராமத்தை விட்டே காலி செய்து கொண்டு போனவர்கள்தான். அதோடு இப்பொழுதான் ரவியை பார்க்கிறான்.
"என்ன ரவி? இப்போ எப்படி இருக்கிங்க? என்ன வேல பார்க்கிறீங்க?" அடக்கமான குரலில் கேட்டான் தேசிங்கு. ரவி என்று பெயர்சொல்வதற்கே ஒருமாதிரி கூச்சமாக இருந்தது அவனுக்கு.
"என்ன தேசிங்கு வாங்க போங்கன்னு . வாடா போடானே பேசலாம் நீ ""ம்ம் பரவாயில்லை இருக்கட்டும்" இந்த முறை 'ங்க'வை மட்டும் விட்டுவிட்டான்.




"நைனா ஒரு கூலித் தொழிலாளி அதான் உனக்கே தெரியுமே. . . . அவர் படற கஸ்டத்தை பார்த்து எப்படியாவது படிச்சு வாழ்க்கையில முன்னேறனுமுங்கற வெறி எனக்குள்ள வந்துடுச்சு. நைனா, அவரோட தொழில்ல என்ன இழுத்துபோட்டுக்கறதுக்கு எப்படி எப்படியோ முயற்சி பண்னார் ஆனா நான் அதுக்கெல்லாம் போகாம வைராக்கியத்தோட படிச்சு, நம்பள மாதிரி கிராமத்து மக்களுக்கு கொடுக்கிற இட ஒதுக்கீட்டுல இன்ஜினியரிங் கல்லூரியில சேர்ந்து, பட்டம் வாங்கி, இப்போ அசிஸ்டன்ட் இன்ஜினியரா இருக்கேன். காசு இல்லாம ஒரு வேளை கஞ்சிக்கும் கூழுக்கும் கையேந்திகிட்டு இருந்த நான் இந்த நெலமைக்கு வந்திருக்கேன்னா . . . அதுக்கு படிப்பு மட்டும் தான்டா காரணம். படிப்புதான் ஏழைகளின் செல்வம் அதுமட்டும் இல்லைனா நானும் எங்க நைனா மாதிரியே சித்தாளவோ. . . மேஸ்திரியாவோ இருந்து. . . என் தலைமுறையும் வறுமையிலே போயிருக்கும் . "
'என்னடா சோறு இது?'என்று கஸ்டமர் யாரோ சோற்றை வாரி அவன் முகத்தில் அடித்தாற்போன்று உணர்வினை தேசிங்கிற்குள் பரப்பியது ரவியின் வார்த்தைகள்.
"ஆமா ரவி இந்த புத்தியில்லாமதான் நான் படிப்ப ஐஞ்சாவதோட நிறுத்திட்டு எங்க நைனாவோட இந்த ஓட்டலுக்கு வேலைக்கு வந்துடேன் . . . இப்ப பாரு இன்னமும்.. . . நான் "அதற்கு மேல் தேசிங்கால் பேச முடியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
பணி முடிந்ததும் கடைசி பஸ் பிடித்து வீடுவரும்வரை நிலைகொள்ளவில்லை தேசிங்கின் மனது। ஒரு தலைமுறையின் நிலையை தலைகீழாய் புரட்டிப் போட்ட வலிமைமிகுந்த படிப்பையா நிறுத்திவிடச்சொன்னேன் ? நம் கஸ்டகாலம் நம்மோட போகட்டும் கனகசபையின் எதிர்காலம் ஆரோக்கியமானதாக இருக்கட்டும் . படிப்பறிவு இல்லாமல் படுகிற பாடு . . . நாய் பாடாத பாடு. . . அது எம் பையனுக்கும் வேணாம்' என்று தோனிற்று.



வீட்டிற்குள் நுழைந்ததும் தூங்கிகொண்டிருந்த கனகசபையை எழுப்பி, 'ஐ யா ..... இந்தா நீ கேட்ட பொஸ்தக காசு . .. . நீ போய் படிய்யா. . 'என்று சொல்லிக்கொண்டே அவன் தலையை கோதிவிட்டான்.
விடிந்தது . வழக்கம் போல தேசிங்கு வேலைக்கு புறப்பட்டான். "நைனா. . . நீ . கொடுத்த காசு நெசமாவே பொஸ்தகம் வாங்கத்தானா? "கனகசபை கேட்டான்.
"ஆமாங்கண்ணு"தெளிவும் நம்பிக்கையும் இன்று தேசிங்கிற்குள் புதிதாய் துளிர்விட்டிருந்தது எப்படியோ ஒரு தலைமுறையை அறியாமை இருட்டில் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்தது. - புதுவைப்பிரபா-



Monday, October 31, 2011

பொய் சொல்லக்கூடாது அப்பா - சிறுகதை




"வளர்ந்துட்டேயில்ல . .தர்ட் ஸ்டாண்டர்ட் வேற போயிட்ட. . .இனிமே, நீயே, தானா குளிக்க கத்துக்கணும்॥ . சரியா. . ." அம்மா சொன்ன வார்த்தைகளுக்கு முதன்முறையாக உயிர் கொடுக்க, குளியலறைக்குள் நுழைந்தான், ராகுல்.

முதலில் அவன் கண்ணில் பட்ட சோப்பு டப்பாவை எடுத்து, சோப்பை இரண்டு மூன்று முறை திருப்பித்திருப்பி பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அவன் மனது ,அதிகாலையில், அப்பாவும் எதிர்வீட்டு டேனியல் மாமாவும் பேசிக்கொண்டிருந்த நொடிகளுக்கு பின்நோக்கிச் சென்றது।

" ஏன் சார். . .நீங்க எப்பத்தான் உங்க கம்பனியில சீனியர் மேனேஜரா ஆவறது?"
"டேனியல் சார்। . . நான் நெனச்சிருந்தா, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே ஆகியிருக்கலாம். என்ன. . .சோப்பு போட்டிருக்கணும்.மத்தவங்க மாதிரி நானும் சோப்பு போட்டிருந்தேன்னா. . . இந்நேரம் சீனியர் மேனேஜரா என்ன , ரீஜனல்; மேனேஜராகவே ஆகியிருப்பேன். ஏன்ன பண்ணறது? எனக்குன்னு இல்லீங்க. . .எங்க பரம்பரைக்கே சோப்பு போடற பழக்கமே கிடையாது."

மீண்டும் சோப்பை இரண்டுடொருமுறை திருப்பித்திருப்பி பார்த்துவிட்டு, " ச்சே! நம்மல பொய் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டு, இப்போ அப்பாவே இப்படி அப்பட்டமா பொய் சொல்றாரே!" ராகுல் தனக்குள்ளேயே நினைத்துக்கொண்டான்.
விஷயம் விளங்கும்வரையோ,அல்லது யாராவது விளக்கும்வரையோ, அப்பாவை பற்றிய நினைப்பு அவனுக்குள் மாறப்போதவதேயில்லை।

-புதுவைப் பிரபா-