Wednesday, September 30, 2015

நாகரீகத்தின் ஆதிக்க மிருகம் -‘வலைப்பதிவர் திருவிழா – 2015-புதுக்கவிதைப் போட்டிக்காக’

பண்பாடு என்பது
திருந்திய ஒழுக்கம்
ஆனால்..
இன்று ஒழுக்கம் திரிந்து-
பண்பாட்டின் பரப்பில்
பைத்தியம் பிடித்து
திரிந்துகொண்டிருக்கிறது

நாகரீகத்தின்
ஆதிக்க மிருகம்
பண்பாட்டை பதம்பார்த்து
பசி தீர்த்துக்கொண்டிருக்கிறது

உலகம்...
இப்போது –
மயானமாக
மனநோயாளிகளின் கூடாரமாக
மாறிக்கொண்டிருகிறது

வீட்டிற்கு வந்த விருந்தாளிகள்
விளம்பர இடைவெளியின்போது மட்டும்
விசாரிக்கப்படுகிறார்கள்

நம்பிக்கை துரோகம்
நட்புக்குள்
புற்றுநோய்போல்
புரையோடிக்கிடக்கிறது

வீரம் என்கிற வார்த்தைக்கு
ஆண்மக்கள்
அகராதி புரட்டி
அர்த்தம் தேடிக்கொண்டிருக்கிறார்கள்

வீதியெங்கும்
கூவிக்கூவி
விற்கப்படுகிறது
காதல்.

சிதைத்தழித்து
சின்னாபின்னமாகி கிடக்கிறது
தமிழ்.

ஆம்.
இதற்கெல்லாம் காரணம்...
பண்பாட்டிற்கு
சங்கூதவந்திருக்கும்
சமீப கால ஊடகங்கள்

வாய்க்கரிசிபோடுதற்காய்
வரிசையாய்  வந்து நிற்கும்
வணிக நிறுவனங்கள்

தோழர் தோழியரே....
விழிப்போடு இருங்கள்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முற்பட்ட
கால வேரிலிருந்து
துளிர்த்தது தமிழர் பண்பாடு
உணர்தோமா நாம்?
அது நம்மிடம் சிக்கி படும்பாடு

வரலாறின் உயிர்ப்பு
பண்பாட்டிலிருக்கிறது
என்பதை உணர்வோம்
பாதை மாறி
பயணித்துக்கொண்டிருக்கும்
நம் பண்பாட்டை மீட்டுக்கொணர்வோம்

இன்று சபதமெடுப்போம்
பண்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும்
செயல்கள் செய்ய நாணவும்
உடலில் உயிர் உள்ளவரை
தமிழர் பண்பாட்டை பேணவும்

புதுவைப்பிரபா 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ 
இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா – 2015’ மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் – 2015’-              ( புதுக்கவிதைப் போட்டி )க்காகவே எழுதப்பட்டது.

என்னுடைய சொந்தப்படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல என்றும் முடிவு வெளியாகும்வரை வெறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன்


புதுவைப்பிரபா 

Monday, September 15, 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014க்கான கவிதை




அழுகுரல் ஓய்ந்தபாடில்லை

அழுகையின்
அதிர்வெண்ணும் அடர்த்தியும்
அவ்வப்போது மாறுபடுகிறதே தவிர
அறவே அற்றுப்போகவில்லை

வடகிழக்கிலிருந்து
ரசிக்கமுடியும்படியான
பச்சிளங்குழந்தைகளின் அழுகுரலும்
தென்மேற்கிலிருந்து
பயங்கொள்ள வைக்கும்
பெரியவர்களின் அகோர அழுகுரலும்
கேட்டபடியே இருக்கிறது.

வருகையை பதிவுசெய்ய
ஒருவித அழுகையும்
வெளியேற்றத்தை உறுதி செய்ய
ஒருவித அழுகையுமாய்
அந்த வளாகத்திலிருந்து
அழுகைகள் அணிவகுக்கின்றன

அந்த மருத்துவமனையின்
பிரசவ அறைக்குள்ளிருந்து வருகிற
மெல்லிய சங்கீத அழுகைக்கும்
பிணவறைக்கு வெளியிருந்து பரவுகிற
கனத்த ஓல அழுகைக்கும்
இடைப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறது
நமக்கான வாழ்க்கை.


புதுவைப்பிரபா

தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014க்கான படக்கவிதை













அழகென்ற சொல்லுக்கு
அர்த்தம் தருபவளே !
மூடிய விழிக்குள்ளும்
முழுவதுமாய் வருபவளே !

உன் காந்த விழிப்பார்வை – என்
எண்ணத்தை ஈர்க்குதடி
உனை பார்க்கும் நொடிப்பொழுதில்
நுரையீரல் வேர்க்குதடி 

உன் உதட்டில் பூத்திருக்கும்
மெல்லிய புன்னகைப்பூ
அதை பார்க்கின்ற உன் கூடை
பூவிற்கும் பொச்சரிப்பு

பெண்ணே....!

நீ சாய்ந்திருக்கும் கதவாக
நான் ஆகக்கூடாதா ?
உன் விரல் பட்ட வரத்தாலே
என் ஆயுள் கூடாதா ?

புடவை கட்டி நிற்கும் பொன் நகையே!
பூகம்பம் நிகழ்த்தும் புன்னகையே !
உன்னால் ...
ஹார்மோன்கள் சுரக்கிறது
சுயம் எனக்கு மறக்கிறது
ஒவ்வொரு ‘ செல்’ லும் என்னுள்
ரெக்கைகட்டி பறக்கிறது  


உன் அழகுநீர் பாய்ந்து பாய்ந்து
என் கற்பனை செழிக்கிறது
உனை வர்ணிக்க வார்த்தை இன்றி
என் தாய்மொழி  விழிக்கிறது


பாரடி..

இந்த  கவிதைகூட அழகாச்சு
உன்னோடு பழகி
ஐயம் ஏதுமில்லையடி -நீ
பிரபஞ்ச பேரழகி

---------------------------------------------- 

புதுவைப்பிரபா