அழுகுரல் ஓய்ந்தபாடில்லை
அழுகையின்
அதிர்வெண்ணும் அடர்த்தியும்
அவ்வப்போது மாறுபடுகிறதே தவிர
அறவே அற்றுப்போகவில்லை
வடகிழக்கிலிருந்து
ரசிக்கமுடியும்படியான
பச்சிளங்குழந்தைகளின் அழுகுரலும்
தென்மேற்கிலிருந்து
பயங்கொள்ள வைக்கும்
பெரியவர்களின் அகோர அழுகுரலும்
கேட்டபடியே இருக்கிறது.
வருகையை பதிவுசெய்ய
ஒருவித அழுகையும்
வெளியேற்றத்தை உறுதி செய்ய
ஒருவித அழுகையுமாய்
அந்த வளாகத்திலிருந்து
அழுகைகள் அணிவகுக்கின்றன
அந்த மருத்துவமனையின்
பிரசவ அறைக்குள்ளிருந்து வருகிற
மெல்லிய சங்கீத அழுகைக்கும்
பிணவறைக்கு வெளியிருந்து பரவுகிற
கனத்த ஓல அழுகைக்கும்
இடைப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறது
நமக்கான வாழ்க்கை.
புதுவைப்பிரபா