Monday, December 19, 2011

எனது கவிதைக்கு முதல் பரிசு

சேனைத் தமிழ் உலா என்னும் இணைய தளம் உலக தமிழருக்கான கவிதைப்போட்டி ஒன்றினை அறிவித்து நடத்தியது. அதில் எனது கவிதைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. பரிசுத் தொகையாக ரூபாய் ஐயாயிரத்திற்கான காசோலையை சேனைத் தமிழ் உலா இணைய தளம் வழங்கியது.
விவரங்களுக்கு. . .
http://www.chenaitamilulaa.net/t27326-topic

Thursday, December 15, 2011

மகாகவி பிறந்த எட்டையபுர வீட்டில் அவன் பிறந்த நாளன்று. . .






மகாகவி பிறந்த எட்டையபுர வீட்டில் அவன் பிறந்த நாளன்று. . .

Thursday, November 3, 2011

உணர்வுள்ள எழுத்தாளர்கள் உடனே ஒப்பமிடுங்கள்


சென்னை கோட்டூர்புரத்தில், 8 ஏக்கர் நிலப் பரப்பில் மக்கள் பணம் 180 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்ட அண்ணா நூலகத்தில் பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், குழந்தைகள் என பல தரப்பினருக்கும் பயன்படக்கூடிய நவீன கட்டமைப்புகள் உள்ளன. பல லட்சம் நூல்கள் வைக்கத்தக்க கொள்ளளவுடன், 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய அரங்குகள், சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளன. ஒரு நவீன நூலகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கல்வியாளர்களின் கனவு குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்ட கட்டிடமாகத் திகழ்கிறது இந்த வளாகம்.

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எனும் சிறப்புகொண்ட இந்த அண்ணா நூலகத்தை விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் எனவும், அந்த இடத்தில் உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக (Super Specialty Paediatric Hospital) மாற்றி அமைக்கப்படும்” என இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 1.1.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தலைமைச் செயலகக் கட்டடத்தைத் தொடர்ந்து இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகமும் மாற்றப்படுவது அரசியல் பகையுணர்வின் அப்பட்டமான வெளிப்பாடாகவே இருக்கிறது.

குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவது என்பது வரவேற்கத்தக்கதே. அதற்குப் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்து புதிதாக ஒரு கட்டடத்தை அங்கு எழுப்ப முடியும். அதற்காக தேவையான உள்கட்டமைப்போடு உருவாக்கப்பட்ட ஒரு நூலகத்தை மாற்ற வேண்டியது இல்லை. மேலும், அண்ணா நூற்றாண்டு நூலகம் தற்போது அமைந்திருக்கும் இடம், அதனைப் பயன்படுத்துவோருக்கு எவ்வகையிலும் இடைஞ்சலாக இல்லை. இதிலேயே மேற்கொண்டு பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி வலுப்படுத்தவும் முடியும்.

ஆகவே, தமிழக அரசு தனது அமைச்சரவை முடிவைக் கைவிட்டு, நூலகம் சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோருகிறோம்.

கீழ்காணும் லிங்க்கை சொடுக்கி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து ஒப்பமிடுங்கள். . . நூலக எதிர்ப்புக்கு ஆதரவு கொடுங்கள். . .



http://www.change.org/petitions/chief-minister-of-tamil-nadu-miss-jjayalalithaa-to-withdraw-the-decision-of-shifting-anna-centenary-library

Tuesday, November 1, 2011

மாற்றம்


"அமைச்சர் பங்களா
கட்டுவதற்கு முன்னால்
இங்கு ஒரு பெருவெளி இருந்தது"
மகன் பேரனிடம் சொன்னார்.

"இந்த பெருவெளிக்கு முன்னர்
இவ்விடம் மணல்மேடுகளோடு
நிறைந்திருந்தது "
நான் மகனுக்கு சொன்னேன்

"இங்கு ஒரு நதி ஓடிக்கொண்டிருந்தது"
என் தந்தை எனக்கு சொன்னார்.

புதுவைப்பிரபா

(இக்கவிதை “கல்கி” வார இதழின் கவிதை கபே பகுதியில் வெளிவந்தது)

கனவு மெய்ப்படும் - சிறுகதை

மக்களின் பூர்வாங்க நீர்த்தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத ஏக்கத்தோடு சுழன்று கொண்டிருந்த உலக உருண்டையில் தான் இந்த கொடாத்தூர் கிராமமும் இருந்தது. இந்த கிராமத்தின் பெரும்பகுதி நிலங்கள் புல்பூண்டு கூட முளைக்க வக்கற்று வறண்டு கிடந்தது. தலைவிரித்தாடிய தண்ணீர் பிரச்சனை விவசாயிகளை வேறு வேலை செய்து பிழைத்துக் கொள்ள செய்தது. அதை கூட சமாளித்து விடலாம் என்று துணிந்தவர்களால், குடிநீருக்காக தினமும் மைல்கணக்கில் நடப்பதை சமாளிக்க முடியவில்லை. நீர் தேடி அலையும் வாழ்க்கை அவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன் விளைவு நகரம் நோக்கி நகர அவர்கள் எடுத்த முடிவு.

“வரதராசு . . . அடுத்த மாசம் நான் இந்த கிராமத்த காலி பண்ணிகிட்டு, டவுன் பக்கம் போயிடலாமுன்னு இருக்கேன். நியாமான வாடகைக்கு வீடு ஏதாவது கிடைச்சா சொல்லேன்”. சுப்பிராயனின் வார்த்தைகளில் கவலை தேங்கி கிடந்தது.

“ சுப்பண்ணே. . . இப்போ எதுக்கு நீங்க டவுனுக்கு போறீய”

“ பாழாப்போன இந்த வானம் காய்ஞ்சு, ஊரத்தான் பொட்டல்காடா மாத்திடுச்சுன்னு பார்த்தா. . . குடிக்கிற தண்ணிக்கும் நாதியத்து போயி நம்மல நாந்;துகிட்டு சாவச்சொல்லுதுப்பா. கோடை ஆரம்பத்திலேயே இந்த பிரச்சனைன்னா இன்னும் போகப்போக. . . . . நம்மால ஆகாதுப்பா”

“அண்ணே டவுன்ல மட்டும் பஞ்சமா நதிகள் பாய்த்து ஓடுதாக்கும். . . அங்கியும் இதேதான்.”

“நான் இல்லேன்னு சொல்லல. ஆனா . . . காசு கொடுத்தாவது அங்க தண்ணிய வாங்கிபுடலாம். பாலுக்கும் தயிருக்கும் செலவழிக்கிற சில்லறைய தண்ணிக்குனு போட்டுட வேண்டியதுதான். ம்ம். நம்ம நிலைமைய பார்த்தியா?”.

“என்னண்ணே நெலம பொல்லாத நெலம? நாம இப்போ தண்ணிக்கு சிங்கி அடிச்சிகிட்டு இருக்கிறதுக்கு யாரு காரணம் தெரியுமா? நமக்கு முந்தைய தலைமுறை. அவங்கதான் பொறுபத்து அக்கடான்னு பொழப்பபார்த்துகிட்டு போயிட்டாங்கன்னு பார்த்தா . . . இப்போ நீங்களும் கிளம்புறீங்க. போங்க ஊரவிட்டே போங்க . . . நீங்கமட்டும் ஏன் போறீங்க. எல்லோரையும் காலிபண்ணி கூட்டிட்டு போங்க, இந்த ஊரு நாசாமாபோகட்டும்.” வரதராசுவின் வார்த்தைகளில் கோவம் கொப்பளித்தது.

வரதராசு.அந்த கிராமத்திலேயே கல்லூரிவரைக்கும் சென்று படித்தவன் அவன் ஒருவன்தான். மற்றவர்கள்போல பட்டம் பெறும் நோக்கத்திற்காகவோ பதவியை அடையும் ஆசையின் பொருட்டோ அவன் படிக்கவில்லை. தன் பகுத்தறிவினை பக்குவப்படுத்திக்கொள்வதற்காகவும்,படித்ததனை ஊரின் நலனுக்காக நடைமுறைபடுத்துவதற்காகவுமே அவன் அதிக அக்கறையோடு படித்தான். அவனது ஊர், அவனது உயிர்.

சுப்புராயனுக்கு என்னவோபோலாயிற்று.

“ வரதராசு. . . நான் என்ன சொல்லிட்டேன்னு இப்போ நீ இப்படி கோவிக்கிற?”.

“ பின்ன என்னண்ணெ. கரிகாலன் காலத்திலேயே வெள்ளப்பெருக்கை கட்டுபடுத்த கல்லனை கட்டி அந்த நீரை காவிரிப்படுகையில் திருப்பிவிட்டு, அதை பாசன வசதிக்கு பயன்படுத்தியிருக்காங்க நம்ம தமிழங்க. அதற்கு பிறகு வந்த மன்னர்களும் வறட்சியான பகுதிகள்ல ஏரிகளை அமைச்சு பாசன வசதிகள ஏற்படுத்தியிருந்திருக்கிறாங்க. அப்போ தமிழ் நாட்டுல இருந்த ஏரிங்க எவ்வளோ தெரியுமா? முப்பத்தெட்டாயிரம். அது அத்தனையும் நமக்கு முந்தனவங்க பராமரிச்சு வந்திருந்தா. . . இப்போ தண்ணி பிரச்சனையே வந்திருக்காது .

“ஐயோ. . . ! “ சுப்புராயனுக்கு ஆச்சரியம் .

“நீங்க ஆச்சரியபடுறமாதிரி இன்னொரு விஉயம் சொல்லவா?” வரதராசு தன் தலைப்பாகயை கழற்றிக்கொண்டே கேட்டான்.

“ம்ம்”

“ நம்ம ஊரிலேயே ஒரு ஏரியும், ஒரு குளமும் இருக்குது தெரியுமா?”

“ சும்மா ஒளராத ராசு. நான் பொறந்துவளர்ந்ததெல்லாம்; இந்த ஊருலதான். ஏனக்கு தெரியாம ஒரு ஏரியாவது குளமாவது.”

“ ஆமாண்ணே. குப்புசாமி வீட்டுக்கு பின்புறம் ஏக்கர் கணக்குல கரம்பா கிடக்குதே நிலம் , அது ஏரிண்ணே. அரசமரத்து புள்ளையார் கோயில ஒட்டி குப்பைமேடா கெடக்குதே அதுதான் ~பாலக்குளம் | “.

நம்பிக்கையில்லாமல் பார்த்த சுப்புராயனுக்கு மேலும் விளக்கம் தரப்பட்டது.

“பிரிட்டிஉ; ஆட்சி வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் ஏரிகுளங்களை பராமரிக்கிற வேலை கிராம சமுதாயத்தின்; பொறுப்பில் இருந்தது. அதனால மக்களே அத சுலபமா பராமரிக்க முடிஞ்சது. வெள்ளக்காரன் ஆட்;சியில கூட, அவனுடைய மேற்பார்வையில மக்கள்தான் அந்த வேலைய செஞ்சிகிட்டு வந்திருக்காங்க. ஆனா . . . சுதந்திரம் கிடைச்ச பின்னாடி ~எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்| ஆயி;ட்டாங்களே, அதனால , யாரும் கீழ்மட்டத்திற்கு எறங்கி வேலை செய்ய முன்வரல. அதன் பலன். . . மேல்நிலை நீர் தேக்கங்கள் எல்லாம் பராமரிப்பு இல்லாம பாழடைஞ்சு போச்சு. . . “

“அது சரி நம்ம பண்றது இருக்கட்டும். மழை இப்போதெல்லாம் சரிவர பெய்யரதேயில்லையே. அப்புறம் ஏரி குளம் வெட்டி என்ன புரையோஜனம்?” தன் அறிவுக்கு எட்டியதை வெளிபடு;;த்தினார்,சுப்புராயன்.

“ இப்படித்தான் உங்கள போலவே எல்லோரும் இப்படியே பேசிகிட்டு இருக்காங்க. ஆனா உண்மை அது இல்ல. நம்ம மாநிலத்தோட வருடாந்திர சராசரிமழையளவு 1100 மில்லிமீட்டர். புள்ளிவிவரப்படி கடந்த பத்து வருஉமா கிட்டதட்ட இந்த அளவு மழை பெஞ்சிருக்கு. கொஞ்சம் கூட குறைய இருக்கலாம். ஆனா. . . நாம பெய்யற மழை தண்ணிய சேகரிச்சு வைக்காம, வீணா வாய்கால்ல வழிஞ்சு ஓடி கடல்ல கலக்க விட்டுட்டு,மழை பெய்யல மழை பெய்யலன்னு பொலம்பிட்டுகிடக்கிறோம் நான் சொல்லரபடி கேட்டு;, இந்த ஊரு மக்கள் கொஞ்சம் ஒத்துழைச்சீங்கன்னா. . . . நம்ம கிராமத்தையே பச்ச பசேல்ன்னு ஆக்கிடலாம் தெரியுமா?”.

ஒரு பெரிய திட்டம் நிறைவேற்றப்படுவதற்கான ~தீ| யை வரதராசு பற்றவைத்தான்.

மறுநாள்.

சுப்புராயன், ஊர் முக்கியஸ்தர்கள் சிலரை அழைத்துகொண்டு வரதராசு வீட்டிற்கு வந்தார். குப்புசாமி, சாந்தப்பன், டேனியல் ஆகியோர் அதில் அடக்கம்.

வரதராசுவுக்கு ஆச்சரியம். எந்த பிரச்சனையாயிருந்தாலும் இந்த மனிதர்களெல்லாம் அவ்வளவு சீக்கிரம் ஒன்றாக கூடி பழக்கமில்லை.

சாந்தப்பன் தொடங்கினார்.

“ தம்பி… . எங்களுக்குள்ள இருக்;கிற கருத்துவேறுபாடு எல்லாத்தையும் மறந்துட்டு, உன்னை நம்பி இங்க வந்துட்;டோம். நம்ம கிராமத்து தண்ணி பிரச்சனையை தீர்க்கிற வழி உங்கிட்ட இருக்கிறதா சுப்புராயன் சொன்னாப்பல. என்ன செய்யனும்னு சொல்;லு அதன்படியே செய்துபுடலாம்.”

உச்ச சந்தோசம்; உள்ளத்தை நிரப்பி, வரதராசுவின் விழிவழியே வழியத்தொடங்கியது. தன் கிராமத்தை வளமாக்க அவன் கண்ட கனவு மெய்ப்;பட தொடங்கிவிட்டதாய் அவனால் உணரமுடிந்தது.

“ ஐயா. நான் சொல்லறத கொஞ்சம் கவனமா கேளுங்க. நம்முடைய தண்ணி பிரச்சனை தீரணுமுன்னா, முதல்ல நமக்குள்ள இருக்குற பாகுபாட்ட உடைக்கனும். அதனால ஊர் மக்கள், காலனி மக்கள்ன்னு நமக்குள்ள பிரிவுகள் ஏற்படுத்திக்காம, இந்த கிராமத்து மக்கள் , இந்த கிராமத்து பிரச்சனைக்காக போராடப்போராங்கன்னு நினைக்கத்தொடங்கனும். முதல்ல நாம செய்ய வேண்டியது சர்வேயர போய் பார்த்து நம்ம ஊர் ஏரியையும் அந்த பாலகுளத்தையும் அளந்து அதோட எல்லைய கண்டுபுடிச்சு கல்லு போடச்சொல்லனும். அந்த எல்லைக்குள்ள யாரு, குடிசைபோட்டிருந்தாலும், வைக்கப்போரு வச்சிருந்தாலும் அல்லது ஏதாவது ஒரு வழியில அத அனுபவிச்சிட்டு இருந்தாலும் தகறாரு பண்ணாம காலி பண்ணி கொடுத்திடனும். இதுதான் முதல் கட்டமா நாம செய்யவேண்டிய வேலை”.

குப்புசாமி தன் பிரச்சனைக்கு வந்தார்.

“தம்பி, நீங்க சொல்லறதெல்லாம் சரிதான். ஆனா. . .ஊர் ஏரின்னு நீங்க குறிப்பிடற அந்த பெரும்பகுதிய எங்க அப்பார் காலத்திலிருந்தே நாங்கதான் ஆண்டுகிட்டு வர்றோம்.அதை தீடீர்;னு மொத்தமா விட்டுகொடுக்கணும்னா.. . அதான் யோசனையா இருக்கு.”

“ ஊருக்கு பொதுவான இடத்த இத்தனை காலம் ஆண்டு அனுபவிச்சதே தப்பு. பிரச்சனைன்னு வந்துட்ட பிறகும் விட்டுகொடுக்க மாட்டேங்கறது அடாவடித்தனம்தானே “ டேனியல் சற்று கடுகடுப்புடன் சொன்னதை கேட்ட வரதராசுவிற்குள் ~ஐயோ! காரியம் கெட்டுவிடுமோ| என்ற பயம் தோன்றி மறைந்தது. நிலமையை சரிபடுத்த அவனே பேசினான்.

“ அண்ணே. . . நாம இப்போ பேசிகிட்டு இருக்கிறது ஒட்டு மொத்த ஊர் மக்களோட உயிர் சம்மந்தப்பட்ட விஉயம். எல்லோரும் நல்லாயிருக்கணுங்கிறதுக்காக நாம வரையறுக்கிற இந்த திட்டத்துல நமக்கு சொந்தமான சொத்துபத்தையே நாம இழக்க தயாராயிடணும். அப்படி இருக்கிற பட்சத்துல அரசாங்க நிலத்தை விட்டுகொடுக்க மாட்டேன்னு அடம்புடிக்கிறது அவ்வளவா நல்லாயில்லை.”

பேச்சுவார்த்தையில் காலம் செலவாகிக்கொண்டிருந்தது. ஆனால் முடிவில் ஊருக்கு நல்ல காலம் உதயமானது. ஆம். குப்புசாமி சம்மதித்திருந்தார். அவரே இறங்கிவந்துவிட்ட பிறகு இனி ஒரு தடையும் இருக்கப்போவதில்லை என்று அனைவரும் திண்ணமாய் நம்பினர்.

நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தது. ஏரி,குளத்தின் எல்லைகள் கண்டறியும் பணி நடந்துகொண்டிருந்தது. வரதராசு தான் கண்ட கனவு மெய்ப்படப்போவதை எண்ணி எண்ணி சரிவர தூங்காமலிருந்தான். இந்த காலத்தில் இப்படியும் ஒரு மனிதன்-காலம் அதிசயப்பட்டது.

தலையை கவிழ்த்துக்கொண்டு திண்ணையில் உட்கார்ந்திருந்த வரதராசுவை பத்து பதினைந்து பேர் சூழ்ந்திருந்தார்கள்.

“ இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி கூனிகுறுகி உட்கார்ந்துட்டே. . .” பத்துபேர் கூட்டத்திலிருந்து வந்தது சுப்புராயனின் குரல்.

“ பின்ன என்னண்ணே. . . அந்த ஏரியையும் குளத்தையும் தூர்வார்றதுக்காக உங்ககிட்டலாம் கையெழுத்து வாங்கின அந்த லெட்டர, அதிகாரிகிட்ட கொண்டுபோய் கொடுத்ததுக்கு, இப்போதைக்கு அத தூர்வார முடியாது, அடுத்த வருஉம் வேணுமுன்னா பார்க்கலாமுன்னிட்டார்.” வரதராசுவின் மனச்சோர்வு வார்த்தைகளில் தெரிந்தது.

“ அண்ணே. . . நாங்கலாம் இருக்கோம்ண்ணே. வாங்கண்ணே ஊர் மக்க எல்லாம் ஒன்னா போயி அந்த ஆபிசர உண்டா இல்லையான்னு பார்த்துடலாம்.” துடிப்புடன் ஒரு இளைஞன் பேசினான்.

“ ம்ம்ச்ச். ஆத்திரப்படக்கூடாது. ஆரசாங்கத்து பக்கமும் நியாயம் இருக்கு. மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் கீழ் ஏரிகுளங்கள புனரமைக்க , ஒரு குறிப்பிட்ட தொகைய ஒதுக்கி, அசராம வேலை பார்த்துகிட்டுதான் இருக்காங்க. அவுங்க, எந்தெந்த கிராமத்துல எந்தெந்த ஏரிகுளங்கள முதல்ல வெட்டறதுன்னு ஒரு திட்டம் வரையறுத்து அதன்படிதான் செயல்படறாங்க. அவங்கள குத்தம் சொல்லி ஒன்னுமில்ல. நம்ம கிராமத்துல அந்த வேலைய உடனே தொடங்கணுங்கிறது என்னோட ஆசை. அது தற்சமயம் முடியாதுங்கிறது அவங்களோட முடிவு.”

வரதராசுவின் பதிலில் நியாயம் இருப்பதை உணர்ந்தவர்கள் அமைதியானார்கள். ஆனால் சுப்புராயன் மட்டும்; யோசித்து ஒரு கேள்வி கேட்டார்.

“ ராசு. . . வேற வழியே இல்லையா ? “

“இருக்குதுண்ணே. எல்லோரும், எல்லாத்துக்கும், எல்லாவேளையிலும் அரசாங்கத்தையே நம்பிகிட்டு இருக்கிறது முட்டாள்தனம். அரசாங்கத்துகிட்ட இருக்கிற பலத்தவிட, பலமடங்கு பலம் நம்மகிட்டயே இருக்கு. ஆனா,அதை நாம ஒழுங்கா பயன்படுத்தறதில்ல. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ~நாங்கலாம் இருக்கோம்|ன்னு இந்த கூட்டத்திலிருந்து ஒரு குரல் கேட்டுச்சு பாருங்க,அந்த குரலுக்கு உயிர் கொடுத்து அதை உண்மையாக்கணும். கிராமத்துல இருக்கிற ஒவ்வொரு வீட்டிலேர்ந்தும் யாராவது ஒருத்தரு முன்வந்து அந்த ஏரியையும் குளத்தையும் தூர்வார ஏதாவது ஒரு வகையில உதவணும். முட்பொதர்கள அழிக்கிறது, மண்வெட்டறது, அதை கொண்டுபோய் கொட்டி கரை அமைக்கிறது, இந்த மாதிரி வேல செய்ரவங்களுக்கு டீ காப்பி போட்டு கொண்டாந்து கொடுக்கிறது, சாப்பாடு போடறது, இல்லேன்னா முடிஞ்சளவு பண உதவி செய்யரதுன்னு.....ஏதாவது ஒரு வகையில உதவறதுக்கு , இந்த கிராமமே ஒன்னுகூடி வந்ததுன்னா… வர்ற மழைக்குள்ள இந்த வேலைகள முடிச்சு, அடுத்த வருஉம் தண்ணி பிரச்சனையே இல்லாம இருக்கலாம்.”

“ அவ்வளவுதானேண்ணே. .கவலையவிடுங்க. இளைஞர்கள் நாங்க இருக்கோம். இப்பவே வீடுவீடா போறோம்: விஉயத்தை சொல்றோம்:ஆள் சேர்க்கிறோம்:இரண்டொரு நாள்ல வேலைய தொடங்கறோம்.” இந்த வாலிபர்களின் வார்த்தைகள் வரதராசுவுக்குள் துவண்டு கிடந்த நம்பிக்கையை தூக்கிநிறுத்தியது. அவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். ~கனவு மெய்ப்படும்| அவன் மனதில் தோன்றியது.

சூரியன் கோடையை சூடேற்றிக் கொண்டிருந்தது. ஆனால் மக்கள் யாவரும் நீர்நிலைகளின் புனரமைப்பு வேலையில் சூடேறியிருந்தார்கள். சாதி, வயது, வசதி, பாலினபேதமின்றி அனைவரும் களமிறங்கி வேலை செய்தார்கள். தங்கள் கிராமத்திற்கு ஏரி குளம் வேண்டு;மென்ற தாகம், அவைகளை அமைத்துமுடிக்கும்வரை அவர்களிடம் தீரவில்லை.

பிரமாண்டமாய் தெரிந்தது,ஏரி. பிரமிக்கவைத்தது,குளம். பார்க்க பார்க்க எல்லோரின் நெஞ்சிலும் ஆனந்தம் தாண்டவமாடியது. இனம் கண்டு கொள்ள முடியாத உணர்வுகள் , அத்தனைபேரின் இதயங்களிலும் பரவியது. வெளிப்படுத்த முடியாத வகையில் உள்ளத்து நிகழ்வுகள் ஒவ்வொருவருக்குள்ளும். ஊருக்கு அழகு கூடியது. ஊர் மக்களுக்கும் அழகு கூடியது.

வரதராசு இன்னும் ஓய்ந்துவிடவில்லை.

“ ஏரிக்கும் பாலக்குளத்துக்கும் நீர்வரத்து வாய்க்கால், வடிகால் வாய்க்கால் சரிசெய்யணும். ஏதிர்காலத்துல இந்த ஏரியையும் குளத்தையும் ஆக்கிரமிப்புல இருந்து காப்பாத்தறதுக்காக கரைய சுத்தி பனங்கன்னு நடணும். . .” இன்னும் சில வேலைகள் சொன்னான்.

வேலைகள் யாவும் முடிந்தது. கொடாத்தூர்; கிராமம் விடிந்தது.

மழை! மழை! மழை!

மழைநீர் ஏரியையும் குளத்தையும் நிரப்பிக்கொண்டிருக்க, மக்களின் மனம் சந்தோஉத்தால் நிரம்பிக்கொண்டிருந்தது. சொட்டு தண்ணீருக்காக தவம் கிடந்த பூமியில் , வயிற்றை நிரப்பிக்கொண்டு , ஏரியும் - குளமும்.

ஊர் மக்கள் வரதராசுவை கொண்டாடினார்கள். வரதராசு தன்னடக்கத்தோடு பேசினான்.


“ தோ. . .பாருங்க. . .என்னை யாரும் பாராட்ட வேண்டாம். ஏன்னா. . இந்த வேலையில ஒவ்வொருத்தரோட உழைப்பும், வேர்வையும் ரத்தமும் இருக்கு. ஒட்டுமொத்த கிராமத்தோட ஒத்துமையே , இவ்வளோ பெரிய சாதனைய சாதரணமா படைக்கிறதுக்கு காரணம். இதையெல்லாம் அமைச்சு முடிக்கிறதோட நம்ம கடமை முடிஞ்சிடல. அதை பத்திரமா பராமரிக்கணும். பாதுகாக்கணும். விவசாயத்த திரும்ப தொடங்கிடுவோம். ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணி, ஏரியில குறையர வரைக்கும் ஏரிப்பாசனம் செய்வோம்;.அதுக்குள்ள ஏரித்தண்ணி ஊறி மேல் ஊத்து எறைக்க ஆரம்பிச்சிடும். தயவு செய்து அதிக தண்ணி தேவைபடுற நெல்லை நடாம, தோட்டப்பயிரு, பழவகைச்செடிகள்,மூலிகை செடின்னு பயிர் செய்யலாம். வேணுமுன்னா அரசு மானியத்தில, தெளிப்பு நீர், சொட்டு நீர் போன்ற சிக்கன நீர் பாசன கருவிகளை வாங்கி பாசனம் செய்யலாம். அதைவிட ஒவ்வொரு கோடையிலும் -தவறாம தூர்வாரி, ஏரியோட நீர்பிடிப்பு திறன் கொறையாத பார்த்துக்கனும்”

கொடாத்தூர் கிராமத்தில் பசுமை படர்ந்தது. அதை பார்க்க பார்க்க பக்கத்து கிராமத்து மக்களுக்கும் ஆசை வந்தது. வரதராசுபோல் அங்கொரு துரைக்கண்ணு கனவு கண்டுகொண்டிருந்தான்.

காலம் அவனது காதில் சொன்னது... "கவலைவேண்டாம். கனவு மெய்ப்படும்' என்று.
-புதுவைப்பிரபா-

ரகசியம்


நாள் தவறாமல்
ரகசியம் என்ற பெயரில்
ஏதோதோ
என் காதில் சொல்லிப்போகிறாய்
அது சரி.
எப்போது காதல் சொல்லப்போகிறாய்?

புதுவைப்பிரபா

தொற்றிக்கொண்டே...


நிரம்பி வழிந்தாலும் கூட
ஓடிப்போய் தொற்றிக்கொண்டு
படியிலே பயணிக்கும் ஒர் பயணிபோல
வேலைச்சுமை பிதுங்கி வழிகிற
என் வாழ்க்கைப்பயணத்தில்
தொற்றிக்கொண்டே வருகிறது
உன் நினைவுகள்.

புதுவைப்பிரபா

கூடு



குருவிகளும் குஞ்சுகளும்
கூட்டினுள் இருந்தபோதும்
'கீச்மூச்' என்ற சத்தம்
வெளிவருவதில்லை.
ஒருவேளை…
வாடகைக்கூடோ?

புதுவைப்பிரபா-

பள்ளிக்கூடம் - சிறுகதை

வாகனங்களும் தொழிற்சாலைகளும் நச்சுப்புகையை நாலா புறத்திலும் உமிழ்ந்துகொண்டிருக்கும் நகரத்திலிருந்து தள்ளியே இருந்தது அந்த கிராமம். வெகுகாலமாக படிப்பு வாசனையே அறிந்திராத அந்த கிராமத்தில்; நிகழ்காலத் தலைமுறைக்கு வரமாய் வந்தமைந்தது அந்தப் பள்ளி.

அதில் ஒரு வகுப்பறை தற்போது நிசப்தத்தால் நிரப்பப்பட்டிருந்தது. மாணவ மாணவியர் தலை கவிழ்ந்த நிலையில் அமர்ந்திருந்தபோதிலும் அவ்வப்போது தலையை நிமிர்த்தியும் சாய்த்தும் மணிமாறனை பார்த்தபடி இருந்தனர். ஒரு சிலர் கமலா டீச்சரையும் இடையிடையே பார்த்துவிட்டு குனிந்து கொண்டனர். கோவம் கொப்பளிக்க உட்கார்ந்திருந்த கமலா டீச்சரின் கடந்த கால்மணிநேர பேச்சின் பாதிப்பில்தான் வகுப்பறை அவ்வாறு கிடந்தது. டீச்சர் மீண்டும் பேச்சைத்தொடங்கினார்.

“கழுத. . . . . . . என்னடா வயசு உனக்கு? இதுல காட்டுற ஆர்வத்த படிப்பில காட்னா எதிர்காலத்துல நல்லாயிருப்ப. இல்ல. . . இப்படியே தான் இருப்பேன்னா. . . அப்புறம் என் வாயால சொல்லகூடாது”.

மணிமாறன் மெல்ல எழுந்து நிற்க முற்பட்டான். “ஆமாம்! இந்த மரியாதைக்கெல்லாம் ஒன்னும் கொறச்சல்இல்ல. உட்கார்ந்து தொல!”

அவன் உட்காரவில்லை.

“இது ஒரு ரெண்டுங்கெட்டான் வயசு. மனசு ஒரு எடத்துல நிக்காம அலைபாயும். கண்டகண்டதையும் மேயும். நாம தான் அத நம்ம கட்டுப்பாட்டுல வச்சிக்கணும். படிக்கிறது பத்தாவது. இப்போதைக்கு படிப்பு. . . . . படிப்பு. . . . . படிப்பு. . . . .. . இதுதான் நம்ம முழு நேர சிந்தனையா இருக்கணுமுன்னு எத்தன தடவ உங்ககிட்ட சொல்லியிருக்கேன்? ஏன்டா நான் சொல்றத புரிஞ்சிக்கவே மாட்றீங்க”

இதே போன்ற தொரு போதனை போன வாரமும் இதே வகுப்பறையில் நடந்தது. அப்போது நடந்தது வேறு ஒரு பிரச்சனை. அன்று குற்றவாளியாய் நின்றது நிர்மல் . அவனை திட்டி தீர்த்துவிட்டு அதன்பின் அந்த பாடவகுப்பு முழுவதும் அறிவுரையிலேயே முடிந்துபோனது.

உணவு இடைவேளையின் போது நிர்மலை சுற்றி மாணவர்கள் கூடி நின்றுகொண்டு ரகசியமாக ஏதோ பார்க்கிறார்கள், சிரிக்கிறார்கள் என்று ஒரு மாணவி கமலா டீச்சரிடம் சொல்ல, அவள், அது, என்ன ஏதென்று விசாரிக்கத் தொடங்கிய நொடியில் அதிர்ந்துபோனாள். நிர்மல் ஒரு கேமரா செல்போன் வைத்திருந்தான். அதில் நடிகைகளின் கவர்ச்சிப்படம் ஏகப்பட்டது இருந்தது. அதுமட்டுமல்ல, அதில் அவள் படம் ஒன்றும் இருந்ததைக்கண்டு இடிதாக்கி அதிர்ந்தாள். பாடம் நடத்துகையில் புகைப்படம் எடுத்து வைத்திருந்தான்.

செய்வதொன்றும் அரியாது, கமலா கத்தினாள், திட்டினாள், அழுதாள், . . . . பின் அறிவுரைகள் சொல்லத் தொடங்கினாள். அந்தக் கோவமே இன்னும் அவளுக்குள் ஆராத நிலையில், இப்போது மணிமாறன் மாட்டியிருக்கிறான்.

இது வேறு ஒரு பிரச்சனை. மணிமாறன் கட்டுரை நோட்டில் இருந்து விழுந்த அந்த ஒற்றைத்தாளில், “ அன்புள்ள காதலிக்கு. . . “ என்று தொடங்கப்பட்டிருந்தது. பக்கத்து வகுப்பு மாணவி ஒருத்திக்கான கடிதம் அது.

கமலா மனம் உச்சவலியோடு உழன்றுக்கொண்டிருந்தது. நிர்மல் பிரச்சனையிலிருந்தே, பள்ளியைவிட்டு போய்விடலாமா வேண்டாமா என்று குழம்பிகொண்டிருந்த அவளுக்கு இந்த பிரச்சனை ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது.

“தோ பாருங்கடா. . . உங்களுக்கு எவ்வளவோ நல்ல விதமா எடுத்துச்சொல்லிட்டேன். காசு பணமெல்லாம் இன்னிக்கு வரும், நாளைக்கு போகும். சாதி, இனம், மதம், மொழி. . . இதெல்லாம் ஒருத்ததனோட வாழ்க்கைய பெருசா மாத்திடாது. ஆனா படிப்பு. . பலம் வாய்ந்தது. அது நாம வாழ்கிற வாழ்க்கை முறைய அப்படீயே புரட்டி போடுகிற வல்லமை வாய்ந்தது. இல்லேன்னா. . . ரிக்ஷா ஓட்டுற ஒரு குடிகார அப்பனுக்கு பொறந்து, பிளாட்பாரத்தில வளர்ந்த நான் இன்னிக்கு உங்க முன்னாடி கௌரவமா இப்படி நிக்க முடியாது. ஒங்க வயசுல எனக்கு ஏற்பட்ட எத்தனையோ பிரச்சனைகள உடைச்சு எறிஞ்சிட்டு, வெறும் படிப்புல மட்டுமே கவனம் செலுத்தனுதால என் வாழ்க்கை எப்படி மாறியிருக்கு தெரியுமா? இன்னிக்கு எனக்கு டவுன்ல சொந்த வீடு, கார்ன்னு சகலவசதிகள் இருந்தும் அங்க இருக்கிற பள்ளிகள்லாம் விட்டுட்டு, இந்த கிராமத்து பள்ளிக்கூடத்துக்கு நானே விருப்பப்பட்டு ஏன் வந்தேன் தெரியுமா? இந்த பகுதியில் தான் வறுமையில் சிக்கித்தவிக்கிற குடும்பங்கள் ஏராளமா இருக்கு .இங்க இருக்கிற எத்தனையோபேர், நான் படிக்கும்போது இருந்த அதே அவல நிலையில் இருக்கீங்க. உங்கள படிக்கவச்சு, உங்களையும் மாத்த முடியம்ன்னு தான் நம்பிக்கையோடு வந்தேன். ஆனா . . . . எம்பேச்ச யாரும் கேட்கறதா இல்லை. இனியும் நான் இங்கே இருந்தேன்னா நான் பைத்தியக்காரி. நான் முடிவு பண்ணிட்டேன். நான் இந்தப் பள்ளிக்கூடத்தவிட்டு போறேன்.” வகுப்பறையை விட்டு வெளியேறிய கமலா டீச்சர் அடுத்த அரைமணி நேரத்தில் பள்ளி முதல்வர் முன், மாற்றல் விருப்ப கடிதத்தோடு நின்றாள்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையிலிருந்த பள்ளிக்கல்வி வெகுவாக மாறியிருக்கிறது. அப்போது ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு இருந்த மதிப்பு, மரியாதை, குருபக்தி, பயம் எல்லாம் தற்போது அற்றுப்போய்விட்டது. மாணவர்களை ஆசிரியர்கள் எதற்காகவும் தண்டிக்கக்கூடாது என்ற கல்வித்துறையின் சமீபத்திய சுற்றறிக்கைக்குப் பின், போக்கிரித்தனமான மாணவர்களின் கை ஓங்கியது. ஆனால் அதில் பெரும்பாலானோரின் வாழ்க்கை இருளில் மூழ்கத் தொங்கியது.

கமலா வீட்டிற்கு சென்ற பின்னும் நிம்மதி இழந்து இருந்தாள். இதுபோன்ற மனநிலையில் அவள் கண்முன் தோன்றுவதும் காதில் வந்து விழுவதும், அவளுடைய பள்ளி ஆசிரியர் பிரபுவின் பிம்பமும் குரலும் தான். அவரது அறிவுரைகளும் ஊக்குவிப்புகளும் மட்டும் இல்லாதிருந்தால், இன்று கமலாவும் ஏதோ ஒரு பிளாட்பாரத்தில் , யாரோ ஒரு குடிகாரனோடு குடித்தனம் நடத்திக்கொண்டிருந்திருப்பாள். ‘சமூகத்துல பிறப்பால இருக்கிற ஏற்ற தாழ்வுகள, ஏழை பணக்கார வரப்புகள, உடைததெறியக்கூடிய ஒரே வலிமைவாய்ந்த ஆயுதம் படிப்புத்தான். அது மந்திரசக்தி வாய்ந்தது. காலவெள்ளத்துல உங்க வாழ்க்கைப்படக, கறையேத்த உதவும் துடுப்பு படிப்புதான். சில பெற்றோர்கள் அப்போ ஒழுங்கா படிக்காததால இப்போ கஷ்டப்படுறாங்க. ஆனா இப்போ நீங்க ஒழுங்கா கஷ்டப்பட்டு படிச்சீங்கன்னா உங்க எதிர்காலத்துல ‘கஷ்டம் ‘ என்கிற வார்த்தையே உங்க வாழ்க்கை அகராதியிலிருந்து அகற்றப்பட்டிருக்கும்’ பிரபுவின் இத்தகைய வரிகளே அவளுக்குள் தன்னம்பிக்கையை உரத்தையும் ஊட்டச்சத்தையும் இட்டு வளர்த்தது.

அழைப்பு மணி ஒலித்து, கமலாவின் எண்ண ஓட்டத்தை இடைமறித்தது. கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்தாள். அது தன் கணவன் கார்த்திக் வழக்கமாக வரும் நேரத்தை காட்டியது.

“என்ன கமலா? ஏன்ன டல்லா இருக்க. ஸ்கூல்ல ஏதாவது பிரச்சனையா?”

“ம்ம்”

“என்னாச்சு. . . . ? அந்த பையன் மறுபடியும் உன்ன செல்லுல போட்டா எடுத்துட்டானா?” புன்முறுவலோடு கேட்டான் கார்த்திக்.

“ அந்தப் பள்ளிகூடம் வேணாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்”

“ அது இருக்கட்டும். பிரச்சன என்னது ?”

“ மணிமாறன்னு ஒரு பையன். . .ஒரு பொண்ணுக்கு. . .” கமலா இழுத்தாள்.

“லவ் லெட்டர். . . அவ்வளவுதானே!” கார்த்திக் இயல்பாய் கேட்டான்.

“என்ன நீங்க. . . எல்லாத்தையுமே சாதாரணமா எடுத்துக்கறீங்க? எனக்கு எவ்வளவு கோவம் வருது தெரியுமா? எம்மேல யாராவது ஏதாவது நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லைன்னு சாத்து சாத்து சாத்திடலாம்ன்னு பார்த்தேன்.”

“அடி பைத்தியக்காரி. . . அந்த பையன் லெட்டர் எழுதுனதுக்கு நீ ஏண்டி மாறணும்? இதோ பாரு உன் லட்சியம்- கொள்கை- கோட்பாடு- கடமை உணர்வோட வீரியம் இவ்வளவுதானா? சர்வீஸ் முழுசையும் ஏழை மாணவர்களோட நலனுக்கு செலவழிக்கப்போறேன்னு நீ சொன்னதெல்லாம் வெறும் வாய் ஜாலம் தானா?

“ என்னங்க பசங்தான் என்ன புரிஞ்சுக்க மாட்றாங்கன்னா.. .. . நீங்களுமா? அவங்களுக்காக நான் உழைக்கத் தயார். ஆனா. . . எம்பேச்ச கேட்க அவங்க தயாரா இல்ல. நான் எவ்வளவு சொல்லியும் திரும்பத்திரும்ப தப்பு பண்றாங்க. அவங்க மத்தியில என் உழைப்பும் பேச்சும் விழலுக்கு இறைக்கிற நீருங்க. புண்ணியப்படாது.” கமலா கவலை கலந்த குரலுடன் சொன்னாள்.

“மொத்தம் எத்தன பேரு உங்கிளாஸ்ல?

“நாற்பத்தஞ்சு”

“ம்ம். இந்த நாற்பத்தஞ்சு பேருல, ரெண்டு பேரு உம்பேச்ச கேட்கல, மதிக்கலேன்னா. . . நீ ஸ்கூல் மாறிடுவியா? நீ புதுசா போற ஸ்கூல்ல ஒரு நிர்மலும் ஒரு மணிமாறனும் இருக்க மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? நீ அடிக்கடி சொல்லுவியே உன்னுடைய கெய்ட் ஆன்ட் காட் ‘பிரபுசார்’ அவரும் உன்ன மாதிரியே யாரோ ரெண்டு பேருக்காக உங்க ஸ்கூல விட்டு அப்போ போயிருந்தார்னா.. . . உன் நிலம என்னவாகியிருக்கும்?”

கார்த்திக்கின் அந்த கடைசி வாக்கியம், அவள் சடாரென வழுக்கி, சாளகத்தில் விழுந்துவிட்டது போன்ற உணர்வை உள்ளத்துள் உண்டாக்கியது.

“பிரபுசார் இல்லாமல். . . . ஐய்யோ!” முன் மண்டையை வலது உள்ளங்கையால் தேய்துக் கொண்டாள்.

“கமலா முதல்ல உம் பேச்ச எல்லோரும் கேட்டு நடக்கணும்னு நெனைக்கறது மகாதப்பு. கேட்காத ரெண்டுபேருக்காக ஸ்கூல் மாறதவிட உம் பேச்ச கேட்டு நடக்கிற ரெண்டுபேருக்கா அங்கேயே இரு. அவங்கள படிக்கவை, முன்னேத்து, உனக்கு ஒரு பிரபு சார் மாதிரி அவங்களக்கு ஒரு ‘கமலா டீச்சர்’ கிடைக்கட்டும். எனக்கு மனசுல தோன்றதை நான் சொன்னேன், அப்புறம் உன் இஷ்டம்” முற்றுபுள்ளி வைத்தான் கார்த்திக்.

மறுநாள் காலை. பள்ளி வளாகத்தில் கமலா நுழைந்ததும் நுழையாததுமாய் நான்கைந்து மாணவர்களும் ஆறேழு மாணவிகளும் அவளை சூழ்ந்து கொண்டு, ‘டீச்சர். . . எங்கள விட்டு போகாதீங்க டீச்சர்’, ‘நீங்க எங்களுக்கு தெய்வம் மாதிரி டீச்சர்’ ‘ பல பிரச்சனைகளுக்கு நடுவுல நான் படிக்கிறேன்னா அதுக்கு காரணம் நீங்க தான் டீச்சர்’ ஒவ்வோரு குரலில் ஒவ்வொரு வாக்கியம் வந்து விழுந்தது. கமலாவிற்கு கண்களின் ஓரத்தில் கசிந்துகொண்டிருக்க , “நான் போவலடா செல்லங்களா” என்று அழுத்தமாக சொன்னாள்.

மாணவ மாணவியர்கள் ஒரு சேர ‘ஓ…’வென கோஷமிட்டு ஆர்ப்பரித்தார்கள்.

புதுவைப் பிரபா

அந்நியன் - சிறுகதை

பெங்களுர், கலாசி பாளையத்தின் திப்பு சுல்தான் அரண்மனைச் சாலை, அதிகாலையிலேயே பரபரப்பாகிவிடும் . காரணம், அந்தச் சாலையில்தான் பெரும்பாலான தனியார் பேருந்து இயக்கும் அலுவலகங்கள் இருந்தன. அங்கு, மூன்று மணியிலிருந்து ஐந்து மணிக்குள் வந்து சேரும் பேருந்துகள் அதிகம். அவ்வேளையில், அந்தச் சாலையே பேருந்து நிலையம் போல் காட்சியளிக்கும்। இதன் பொருட்டுதான், தர்மசிவம் இங்கு இடம்பிடித்து, பெட்டிக்கடை வைத்துக் கொண்டார்.


கடலூர் மாவட்டத்தின் நெல்லிக்குப்பம் கிராமம் இவரது பூர்வீகம்.கடந்த ஏழு வருட பெங்களுர் வாசத்தால், கன்னட மொழியும் வசப்பட்டிருந்தது. கன்னடமென்ன பாதி தமிழ்தானே!பயண களைப்பு முகம் முழுக்க பரவிகிடந்த ஒருவர், தர்மசிவத்தின் கடையில் பொருள் வாங்க நின்றிருந்தவரிடம், ‘மும்பைக்கு இங்கிருந்து எந்த பஸ்ல போகலாம்?’ என்று ஆங்கிலத்தில் கேட்க, அந்த நபர் திருதிருவென விழித்தார்। ‘மும்பைக்கு போகணுமா? தோ…எதிர்த்தாப்பல இருக்கிற டிராவல்ஸ்க்கு போங்க। இன்னும் ஒரு மணி நேரத்துல ஏ।சி। வோல்வோ பஸ் இருக்குதுன்னு நினைக்கிறேன்” தர்மசிவம் வலிய மூக்கை நுழைத்து உதவினார். காரணம், அந்த ஆசாமியின் கையிலிருந்த ‘பாரதியார் கவிதைகள்’ காட்டிக்கொடுத்தது.இன்னும் சிலவற்றை தர்மசிவத்திடம் விசாரித்துக்கொண்டு அந்த நபர் நகர்ந்தபோது, ‘என்ன? உங்க ஊர்க்காரரா?’ என்று நக்கலாய் கன்னடத்தில் கேட்டான், சந்திரண்ணா.

சந்திரண்ணாவைப் பற்றி ஒரு சில விஷயங்கள் சொல்லியே ஆகவேண்டும். முப்பது வயது இளைஞன். நிரந்தரமான வேலை ஏதுமில்லாமல், வாரத்திற்கு ஒரு கடை: ஒருவிதமான வேலை என்று மாற்றிக்கொண்டே போவது அவனது வழக்கம். ஆனாலும், அவன் செய்யும் உருப்படியான ஒரே வேலை, அதிகாலை வேளையில், அந்த தெருவில் வந்திறங்கும் பயணிகளை கவர்ந்து, அவர்கள் தங்குவதற்கு விடுதிகளை கை காட்டிவிட்டு, கமிஷன் பெற்றுக்கொள்வதுதான். இவற்றையெல்லாம் விட, அவனுக்கு பிடித்த வேலை, வம்பு வளர்ப்பது.

ஒரு இளஞ்சோடி தர்மசிவத்தின் கடையில் வந்து நின்றது. அவன் செல்போனில் பேசியப்படி காலிடுக்கில் பெட்டியை திணித்துக்கொள்ள, அந்தப் பெண் இரண்டு கைகளையும் குறுக்கலாக்கிக் கட்டிக்கொண்டு நின்றாள். பெங்களுரின் அதிகாலை மென்குளிர் அனேகம்பேரை அப்படித்தான் நிற்க வைக்கும். ஒரு சில வினாடிகளில் செல்போனை துண்டித்துவிட்டு, தர்மசிவத்திடம் தண்ணீர் பாட்டில் கேட்டான். அப்படியே ‘இங்க…. பக்கத்துல ரூம் ஏதாவது கிடைக்குமா?’ என்று மலையாளம் கலந்த நெடியோடு விசாரித்தான்.“சந்திரா…” தர்மசிவம் குரல்கொடுத்தார். சந்திரண்ணா அவர்களை அழைத்துக்கொண்டு நகர்ந்தான்.

சந்திரண்ணாவிற்கு இயன்றவரை உதவுவார், தர்மசிவம். வேலை விஷயத்தில் கூட அவனுக்காக அவர் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அவன் அதையெல்லாம் வீணடித்துவிட்டு விதண்டாவாதம் பேசித்திரிந்தான்.அன்றும் வழக்கம்போல மூன்று மணிக்கெல்லாம் கடையை திறந்தார் தர்மசிவம். பேருந்துகளின் வருகை குறைவாக இருக்கக் கண்டதும் சந்தேகித்து, பக்கத்தில் விசாரித்தார்.‘ஒகேனக்கல் பிரச்சனையால, தமிழக பேருந்துகள் எல்லாம் ஓசூர்லேயே நிறுத்திட்டாங்க. எங்கப் பார்த்தாலும் ஒரே பிரச்சனையா இருக்குது. நீயும் பேசாம கடையை மூடிட்டு போயிடு’ – காரணத்தோடு அறிவுரையும் வந்தது.கர்நாடகாவில் உள்ள ஆறுகோடி பேரில், எழுவது லட்சத்திற்கும் அதிகமாக தமிழர்கள் வசித்து வருகிறார்கள். 29 மாவட்டங்களிலும் இவர்கள் பரவி இருந்த போதிலும், ஏதாவது ஒரு பிரச்சனை என்றால், ஒட்டு மொத்த தமிழர்களும் இன்னலுக்கு ஆட்படுவது இயல்பு.கடையை மூடிவிட்டுபோய்விடலாம் என்று முடிவெடுத்து முடிக்கும் நொடியில், நான்கைந்துபேர் ஒன்றாய் கூச்சலிட்டபடியே ஓடிவந்து தர்மசிவத்திடம் தகராறு செய்தனர். அந்தக் கூட்டத்தில் சந்திரண்ணாவும் இருந்தான். பேசிக் கொண்டிருந்த போதே ஒருவன் தர்மசிவத்தை நெட்டித் தள்ளினான். அவர் விழுந்து எழுந்து வருவதற்குள் கடையை அடித்து நொறுக்கினார் இருவர். சந்திரண்ணாவும் முழக்கமிட்டபடி ஒன்றிரண்டு பாட்டில்களைத் தூக்கிப்போட்டான்.தர்மசிவத்திற்கு சந்திரண்ணாவின் செய்கை அதிர்ச்சி தரவில்லை. ஏனெனில், அவனது கண்மூடித்தனமான இனவெறி அவருக்குத் தெரியும்.அந்தக் கூட்டம் அங்கிருந்து ஓடத்தொடங்கியபோது சந்திரண்ணாவும் கண்டுக்கொள்ளாமல் ஓடினான். இரண்டொரு அடியில் ஏதோ தடுத்தி கீழே விழுந்த சந்திரண்ணாவின் பின் மண்டையை சாலையோரம் கிடந்த சிமெண்ட் சிலாப் கிழித்தது. இரத்தம் கொடகொடவென கொட்டியது. கீழே விழுந்துவிட்ட இவனை கண்டுகொள்ளாமல், கூச்சலிட்டுக் கொண்டே அந்தக் கூட்டம் வேறொரு கடையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. அதிலும், தூரத்தில் போய் திரும்பி பார்த்த ஒருவன், சந்திரண்ணாவை செய்கை காட்டி ‘வா! வா!’ என்று அழைத்துக் கொண்டிருந்தான்.தர்மசிவம் ஓடிப்போய் சந்திரண்ணாவை தூக்கிக் கொண்டார். அருகாமையில் இருந்த இன்னொருவரின் உதவியோடு ஆட்டோவில் தூக்கிப் போட்டுக் கொண்டுபோய், அந்த தெரு முனையில் இருந்த பெங்களுர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த பொழுது முழு மயக்கத்திலிருந்தான் சந்திரண்ணா.

காலை ஆறு மணி. செய்தி அறிந்து மருத்துவமனைக்கு வந்த தர்மசிவத்தின் மகன் முகிலன், அந்த காட்சியைப்பார்த்து அதிர்ச்சியுற்று நின்றான். தர்மசிவம், சந்திரண்ணாவுக்காக இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்.“அப்பா… என்னப்பா இதெல்லாம்? இவனும்தான் உங்கள அடிக்க வந்தானாமே… மனசாட்சியே இல்லாம நம்ம கடைய உடைச்சியிருக்கிறான். இந்த நன்றிக் கெட்ட நாயிக்குப்போய்… ச்சே!” முகிலன் நெற்றியை பிடித்துக் கொண்டான்.“முகிலா… அப்படியெல்லாம் பேசாத. நல்ல பலமான அடி. அதிக இரத்தபோக்கு. உடனே இரத்தம் ஏத்தனுமுன்னாங்க. பி. பாஸிட்டிவ் குருப் இன்னாங்க. நானே குடுத்திட்டேன். எனக்குள்ளும் அவனுக்குள்ளும் ஓடுறது ஒரே இரத்தம்ன்னு கண் விழிச்ச பின்னே அவன் புரிஞ்சுகிட்டா சரி.ஏதோ பேச வந்த முகிலனை, பேசவிடாமல் தடுத்து தர்மசிவமே தொடர்ந்தார்.“டேய் முகிலா… தமிழர்களோட இரத்தம் கர்நாடகாவுல ஓடணும்ன்னு அவன் நினைக்கிறான். கன்னடனுக்குள்ளேயும் தமிழன் இரத்தம் ஓடட்டுமேன்னு நான் நினைக்கிறேன். அவ்வளவுதான். விடு, இதுக்குப்போய்….”கண்மூடிக்கிடந்த நிலையிலும், நீர்த்திவலைகள் கன்னங்களில் கோடுகிழித்தபடி உருண்டுக் கொண்டிருக்க, சந்திரண்ணா ஏதோ முனகினான்.“முகிலா… அவன், “யாதும் ஊரே யாவரும் கேளீர்ன்னு’ சொல்றாப்பல இல்ல” தர்மசிவம் கேட்டார்.

-புதுவைப்பிரபா-

திமிறி எழு! - சிறுகதை


அந்த குக்கிராமத்தின் குடிசை வீட்டிலிருந்து வந்த அந்த முணகலைத் தொடர்ந்து-
“யப்பா. . . . .யம்மா. . . . .” சித்ரா எழுந்திருக்க முயற்சி செய்து முடியாமல் படுத்துக்கொண்டாள். தோள்பட்டையில் பலத்த வலி. நடு முதுகில்கூட அதே அளவிற்கு வலியை உணர முடிந்தது, அவளால். இடது கைவிரல்களால் முன் நெற்றியை தடவிப்பார்த்தபோது, இரண்டு இடங்களில் வீங்கியிருந்தது.
“படுபாவி! ஒருநாளப்போல. . . . . சம்பாத்யத்த எல்லாம் குடிச்சு குடிச்சி அழிக்கிறதுமில்லாம, ஈவு இரக்கமே இல்லாம அடிச்சு பாடா படுத்துறானே. . . . . இவன் நல்ல கதிக்கு போவானா?” சித்ராவால் இந்த வாக்கியத்தை நான்கைந்து இடங்களில் நிறுத்தி நிறுத்தித்தான் சொல்ல முடிந்தது.
சித்ரா- பத்தாம் வகுப்பு வரை படித்தவள். வறுமையின் பற்களில் அவளது வாழ்க்கை சிக்கிக்கொண்ட காராணத்தினால், மேற்கொண்டு படிக்க முடியாமல் கூலி வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். பக்கத்து கிராமத்திலிருந்த தீப்பெட்டி தொழிற்சாலை தொடங்கி, இன்று பணிபுரிந்துகொண்டிருக்கும் மிக்சர் கம்பெனி வரையிலான பணிக்கு இடையில் எத்தனை வித வேலைகளை அவள் செய்து நற்பேர் பெற்றிருக்கிறாள். படுதிறமைசாலி என்று மற்றவர்கள் அவளைப் புகழ்ந்தாலும், கணவன் கணேசனுக்கு மட்டும் அவள் 'தெண்டத்தீவிட்டி' தான்.
ஒரு வழியாக சிரமத்தோடு எழுந்து அமர்ந்த நொடியில் - “ சித்தி. . . சித்தி. . . என்ன சித்தி மணி ஏழாயிட்டது, இப்போதுதான் எழுந்திருக்கீங்க? கம்பெனிக்கு போகலியா? “ சித்ராவின் அக்கா மகள் சங்கீதா, குரல் கொடுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தாள்.
“ம்கூம் , போவனும்தாம்புள்ள. ராத்திரி இந்த மனுசன் நடத்துன கூத்து. உடம்பெல்லாம் ஒரே வலி. எழுந்திருக்கவே முடியல. நீ காலேஜுக்கு கிளம்பிட்டியாபுள்ள?” நடுநடுவே முணகலோடு பேசினாள்.
“ஐயையோ! சித்தி! இப்படி வீங்கியிருக்குது. . .. .ம்ம்ச்ச்” நெற்றியை தடவிப்பார்த்து “உச்ச்ச்” கொட்டிவிட்டு, இப்போ எங்க அவரு” என்றாள் ஆவேசமாக.
“விடியுதோ விடியலையோ, தெளிஞ்சதும் எழுந்துபோயிடவேண்டியதுதான் அவரோட வேலை. இப்போ எங்க இருப்பாரு அவரு?”
“சித்தி! நான் எத்தனையோ தடவ சொல்லிட்டேன். நீங்க கேட்கவே மாட்றீங்க உங்க அவஸ்தைக்கெல்லாம் காரணம், நீங்க கொடுக்குற எடந்தான். கொஞ்சமாவது எதிர்த்து பேசுங்க. மாடா ஒழப்பெடுத்துட்டு, அடி ஒத படறதுக்கு நீங்க என்ன அவரு வளர்க்கிற நாயா?
“ஏ.. புள்ள . . . . இன்னாதான் இருந்தாலும் ஆம்பளையாச்சே! நாம பொம்பள. அடங்கிதான் போவணும். விடு ! என்னைக்காவது அந்த ஆளுக்கு நல்லபுத்தி வராமலா போயிடும்.”
“ இதான். இப்படித்தான்,மத்தமத்த பொம்பளைங்கப்போலவே புருசன், புருசன். . ஆம்பள, ஆம்பளன்னே பேசி, கெட்டு குட்டிச்சுவரா நிக்கறீங்க. நான் கேக்கறேன். . . அடிக்கறதுக்கும் அடிவாங்கறதுக்கும் ஆம்பள இன்னா? பொம்பள இன்னா? நீயும் சம்பாரிக்கற, அவரும் சம்பாரிக்கறாரு. நீயாவது நாலுகாசு சேர்த்துவச்சு, இந்த ரெண்டு வருசத்துல, சாமான் சட்டின்னு வாங்கிப்போட்டிருக்கிற. அவரு இன்னாடான்னா. . . எல்லாத்தையும் குடிச்சி குடிச்சி அழிச்சிட்டாரு. முறைப்படிபார்த்தா, நீதான் அவர அடிச்சி திருத்தி ஒழுங்குபடுத்தணும்”
“ஐயையோ! என்னபுள்ள. . .என்னென்னமோ பேசற!. சரி விடு. நீ வந்த விசயத்த சொல்லு!”
“ என் விசயம் இருக்கட்டும். தோ பாரு சித்தி! கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசங்கிற காலம்லாம் மலையேறிடுச்சு. இப்போலாம், கல்லுன்னா கல்லுதான். புல்லுன்னா புல்லுதான். புருசன்னா மட்டும்தான் புருசன். எனக்கு மட்டும் இதுமாதிரி ஒருத்தன் வாய்ச்சான்னு வச்சிக்கோயேன். . .போலீசுல புடிச்சுகுடுத்து, முட்டிக்கு முட்டி தட்ட வச்சிடுவேன். சரி. ஊங்கிட்ட சொல்லறதும், அதோ அங்க கெடக்குதே அந்த அம்மிக்கல்லு அதுகிட்ட சொல்றதும் ஒன்னுதான். நான் கௌம்பறேன். எட்டுமணி பஸ்ஸ உட்டா, டவுனுக்கு போயி சேர்றதுக்குள்ள எங்கத கந்தலாயிடும். சாந்துப்பொட்டு எடுக்கத்தான் வந்தேன். எடுத்துக்கறேன் சித்தி. நீ ஒடம்புக்கு வெந்நீர் வச்சி ஊத்து”
அக்கா மகள் என்றாலும், வயது வித்தியாசம் என்னவோ ஆறு ஏழுதான் இருக்கும் இவ்விருவருக்கும். சங்கீதா, சித்ராவின் முதன்மைத்தோழி. சங்கீதா போன பின்னும், அவள் உதிர்த்துவிட்டுப்போன வாக்கியங்கள் அந்த வீட்டின் மண்சுவற்றில் பட்டுபட்டு எதிரொலிப்பதுபோலவே இருந்தது, சித்ராவிற்கு.
அன்று இரவும் கச்சேரியைத் தொடங்கினான், கணேசன்.
“ஏய். . . . சித். . . .ரா. .. . இங்க வாடி” அவள் பின்னந்தலை முடியை கொத்தாய் பிடித்து இழுத்தான்.
“யோவ்! நேத்து சாப்பாட்ல உப்புஇல்ல, காரமில்லன்னு அடிச்ச. இன்னிக்கு என்னய்யா பிரச்சன?” பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டாள்.
“ காலையி;ல ஆறுமணிக்குமேல ஒரு பொம்பளைக்கு என்ன தூக்கம் வேண்டிகெடக்குது. . . . நா. . . போறவரைக்கும் நீ எழுந்திருக்கல. .யில்ல? .” நா குழறிப்பேசினான்.
“தோ பாரு! சும்மா கண்டதுக்கொல்லாம் அடிக்கிற வேல வச்சுக்காத. நிறுத்திக்கோ இல்லன்னா. . . .” அவள் முடிப்பதற்குள்-
“இன்னாடி பண்ணுவ? என்ன அடிக்கப்போறீயா? அடி இந்தா அடி. . . . “நெஞ்சை நிமிர்த்திக்காட்டிக்கொண்டுபோய் அவளை நெட்டித்தள்ளினான். அவள் வழக்கம்போல் குப்புறப்படுத்துக்கொண்டு அழத்தொடங்கினாள்.
பீடி பற்ற வைத்துக்கொண்டே, "மெரட்டுறீயா? இரு நாளைக்கு, கூட கொஞ்சம் ஊத்திக்கினுவந்து. . . சங்சகறுத்துடறேன்” என்றான்.
விடிந்தது-
வாசல்தெளிக்கவந்த சித்ரா, சங்கீதாவை அழைத்து, அவள் காதில் ஏதோ கிசுகிசுத்தாள். முகமலர்ச்சியுடன் இரண்டடி நகர்ந்துபோன சங்கீதா திரும்பவந்து, சித்ராவின் கன்னத்தைகிள்ளி முத்தமிட்டுவிட்டுச் சென்றாள்.
மாலை-
அந்த குக்கிராமத்தின் அனேகம் பேருக்கும் அதிர்ச்சியில் முகம் இறுகிப் போயிருந்தது. கற்பனையிலும் நினைத்திராத காட்சி அவர்கள் கண்முன்.காவல்துறை வண்டியில் கணேசனை குண்டுக்கட்டாக தூக்கிப் போட்டார்கள்;, காவலர் இருவர்.
“நான் இன்னா பண்ணேன். என்னை ஏன் புடிச்சுட்டுப்போறீங்க?” முரண்டுபிடித்த அவனிடம், “ஆங். . . தெனமும் பொண்டாடிய குடிச்சிட்டு வந்து அடிச்சு சித்ரவத படுத்தின இல்ல. . .. அவங்க மகளீர் காவல் நிலையத்துல உம்பேர்ல புகார் குடுத்திருக்காங்க . . . விசாரணைக்கு ஏட்டம்மா கூட்டிட்டு வரச்சொன்னாங்க. தொரைக்கு வெளக்கம் போதுமா இன்னும் வேணுமா?” காவலர் ஒருவர் சொன்னார். கணேசன் சித்ராவை முரைத்து பார்த்தான். தன் தோள் மீது கைப்போட்டு நின்றிருந்த சங்கீதாவை விட்டு சற்று விலகி நின்று, “ இன்னாய்யா மொறைக்கிற? ஒழுங்கா, புருசனா லட்சணமா எங்கூட குடித்தனம் நடத்தியிருந்தா நான் ஏன்யா அங்கலாம் போறேன். பொம்பளங்கிறவ எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு பொத்திக்கிட்டே போவணும்ங்கிற அவசியம் கெடையாது. யோவ். . . இப்பமட்டும் எதுவும் கெட்டுப்போவலைய்யா. நீ திருந்தி. . . என்னை மனைவியாக்கூட வேணாம், ஒரு மனுசியாவாவது மதிச்சி குடும்பம் நடத்துற எண்ணமிருந்தா ஏட்டம்மாக்கிட்ட சத்தியம் பண்ணிக்குடுத்துட்டு வா! இல்லன்னா. . . போயிக்கிட்டே இரு” என்றாள்.
வண்டி நகர்ந்ததும் ஆண்களும் பெண்களுமாய் கூடியிருந்த கூட்டம் கலைந்தது. ஆதில் ஆண்கள் பலர், இனி அந்த குக்கிராமத்திற்குள், இந்த காவல்துறை வண்டி அடிக்கடி வரவாய்ப்பிருப்பதாக கருதினர். பெண்களில் பலர், முன்பைவிட சற்று நெஞ்சை நிமிர்த்தி நடந்தனர்.
புதுவைப் பிரபா

ஏழையின் செல்வம் - சிறுகதை

வழக்கம்போல் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் தன் குடிசையைவிட்டு வெளியேறினான், தேசிங்கு। தற்செயலாய் தூக்கம் கலைந்ததும், தன் தந்தை புறப்படும் காட்சி கனகசபையின் விழித்திரையில் விழுந்தது. அடுத்தநொடி, அடித்து பிடித்து எழுந்து, "நைனா. . . . நைனா. . . . காசு கொடுத்துட்டு போ. . . நான்தான் நேத்து ராத்திரியே கேட்டேனே. . . . . கொடுத்துட்டுப்போ. . . "என்றான்.
பதில் ஏதும் பேசாமல், தேசிங்கு , வயல் சேலையில் ஜரிகையாய் ஓடும் ஒற்றையடிப்பாதையில் இறங்கி, விரைந்தான்.
"நைனா . . .. நான் இன்னா வாங்கித்துன்னவா கேக்கிறேன்? பொஸ்தகம் வாங்கனும்ன்னு தானே . . . இன்னிக்கும் நான் காசு கொண்டுபோய் கணக்கு வாத்தியாருகிட்ட குடுக்கலீன்னா. . . . பெறவு.. . . . பள்ளிக்கூடத்தில சேர்க்கமாட்டாரு.நைனா. . . . நைனா.. . . குடூ" தலையை சொறிந்துகொண்டே பின் தொடர்ந்தான், கனகசபை.
"அடிங்க . . . ஏதாவது கேட்க போறேன்டா. . . நான் தான் நேத்தே சொன்னேனில்ல . . . . என்னால காசு கீசு குடுக்க முடியாது. நீயும் இஸ்கூலுக்கு போக வேணாம். நானே அஞ்சாவது வரைக்கும்தானே படிச்சேன். அப்பால . . . நீ மட்டும் நெறைய படிக்கனும்ன்னு அடம் புடிச்சா? ஏழாவது வரைக்கும் படிச்சல்ல: அதுபோதும். இப்ப எட்டாங்கிளாசுக்கு நீ போறதாலதான அந்த வாத்தியான் காச கொடு, பணத்த குடுங்கிறான். நீ ஒன்னும் போகத்தேவையில்ல . . . . பெசாம, நாளையிலேர்ந்து என்கூட நீயும் ஓட்டலுக்கு வந்துடு, மொதாளிகிட்ட சொல்லி உனக்கு ஏதாவது எடுபுடி வேலைக்கு ஏற்பாடு பண்றேன். மாசம் நூறோ எறநூறோ . . . கிடைக்கும்"
சாதாரணமான வார்த்தைகளால் கனகசபையை சமாதானப்படுத்த முயற்சித்தான், தேசிங்கு. ஆனால் கனகசபையின் காதுகளில் அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அமிலமாய் விழுந்தது. அதில் அவனது கனவுக்கு மூச்சிதிணரல் ஏற்பட்டது.
"நைனா . . . ஒன்னால காசு தரமுடியாதுன்னு வேணா சொல்லு அதுக்காக . . . பள்ளிக்கூடத்தவிட்டு நிக்க சொல்லாதே. நான் படிப்பேன் . . . பெரிய படிப்பெல்லாம் படிப்பேன் . . . நீ ஒன்னும் தரவேணாம், பாஞ்சிருவாதானே பிச்ச எடுத்தாவது அந்த புஸ்தக காச நான் வாத்தியார்கிட்ட கொடுத்துட்டு. . . படிக்கிறேனா இல்லையான்னு பாரு. . . " துக்கம் அடைக்க தழுதழுத்து வந்து விழுந்தது வார்த்தைகள். தன் தந்தையிடம் எந்த பதிலையும் எதிர்பார்க்காமல், திரும்பி நடக்க தொடங்கினான். தந்தையும் பிள்ளையும் தற்போது எதிர்எதிர்திசையில். நடையிலும் , எண்ணத்திலும்.
தேசிங்கு, 'ஆளைவிட்டால் போதும்' என்கிற போக்கில் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாம் நடந்து பேருந்து நிறுத்தத்தை அடைந்தான். தன் கிராமத்தின் வழியாக நகரத்திற்கு செல்லும் முதல் பேருந்து சரியான நேரத்திற்கு வந்ததும் அதில் ஏறி அமர்ந்து பயணித்தான்;.
தேசிங்கு - நகரத்தில் இருக்கும் ஒரு பிரபல ஓட்டலில் சர்வர். காலை ஆறு மணியிலிருந்;து இரவு பதினோருமணிவரை வேலை. ஆயிர ரூபா சம்பளம். வயல்வேலைக்கு சென்று பொருளாதாரத்தை ஈடுகட்ட உதவும் தாரம். ஒரு மகள் , ஒரு மகன்; மகன் கனகசபை மூத்தவன்.



மாலை ஆறு மணி
டிபன் நேரம் என்பதால் ஓட்டலில் கூட்டம் வழிந்தது. வழக்கமான வேலைகளில் இருந்தான் தேசிங்கு. அந்த டேபிளில் தண்ணி டம்ளர் கொண்டுபோய் வைத்துவிட்டு, "சார் . . . . உங்களுக்கு என்ன வேணும்"என்றான். அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு, "சூடா என்னப்பா இருக்கு"என்றார் அந்த பேண்ட் சர்ட் மனிதர்.
தேசிங்கின் சமவயதுகாரர் அப்படி பார்த்தது அவனுக்குள் எந்த கேள்விகளையும் எழுப்பவில்லை. ஏனெனில் அவனுக்கும் அவரை அப்படி பார்க்கத்தோன்றியது.
"சூடா । . போண்டா. . .ஆனியன் பஜ்ஜி. . . மசால்வடை . . . ரோஸ்ட். . "நீட்டிக்கொண்டேபோனான்.
"ஒரு செட் போண்டாவும் . . . ஸ்ட்ராங்கா ஒரு காப்பியும் . . . "அந்த மனிதர் ஆர்டர் கொடுத்தார்.
தேசிங்கிற்கு சாடாரென ஒரு கேள்வி எழுந்து மறைந்தது. பரிமாறும்போது அந்த நபரிடம் அதை கேட்டுவிடும் முடிவொடு இருந்தான், போண்டாவோடு அந்த டேபிளுக்கு அருகில் தேசிங்கு சென்றதும் , அவர் கேட்டார்
"உங்க பேரு . . . . தேசிங்குதானே?"
"நீங்க . . . ரவிதானே.. . . "பதிலுக்கு தேசிங்கு
தேசிங்கும் ரவியும் ஐந்தாவது வரை ஒன்றாக படித்தவர்கள் ரவியின் அப்பா ஒரு கட்டிடக் கூலித் தொழிலாளி. வேறொரு ஊரில் பாலங்கட்டும் வேலைக்காக போகையில் அந்த கிராமத்தை விட்டே காலி செய்து கொண்டு போனவர்கள்தான். அதோடு இப்பொழுதான் ரவியை பார்க்கிறான்.
"என்ன ரவி? இப்போ எப்படி இருக்கிங்க? என்ன வேல பார்க்கிறீங்க?" அடக்கமான குரலில் கேட்டான் தேசிங்கு. ரவி என்று பெயர்சொல்வதற்கே ஒருமாதிரி கூச்சமாக இருந்தது அவனுக்கு.
"என்ன தேசிங்கு வாங்க போங்கன்னு . வாடா போடானே பேசலாம் நீ ""ம்ம் பரவாயில்லை இருக்கட்டும்" இந்த முறை 'ங்க'வை மட்டும் விட்டுவிட்டான்.




"நைனா ஒரு கூலித் தொழிலாளி அதான் உனக்கே தெரியுமே. . . . அவர் படற கஸ்டத்தை பார்த்து எப்படியாவது படிச்சு வாழ்க்கையில முன்னேறனுமுங்கற வெறி எனக்குள்ள வந்துடுச்சு. நைனா, அவரோட தொழில்ல என்ன இழுத்துபோட்டுக்கறதுக்கு எப்படி எப்படியோ முயற்சி பண்னார் ஆனா நான் அதுக்கெல்லாம் போகாம வைராக்கியத்தோட படிச்சு, நம்பள மாதிரி கிராமத்து மக்களுக்கு கொடுக்கிற இட ஒதுக்கீட்டுல இன்ஜினியரிங் கல்லூரியில சேர்ந்து, பட்டம் வாங்கி, இப்போ அசிஸ்டன்ட் இன்ஜினியரா இருக்கேன். காசு இல்லாம ஒரு வேளை கஞ்சிக்கும் கூழுக்கும் கையேந்திகிட்டு இருந்த நான் இந்த நெலமைக்கு வந்திருக்கேன்னா . . . அதுக்கு படிப்பு மட்டும் தான்டா காரணம். படிப்புதான் ஏழைகளின் செல்வம் அதுமட்டும் இல்லைனா நானும் எங்க நைனா மாதிரியே சித்தாளவோ. . . மேஸ்திரியாவோ இருந்து. . . என் தலைமுறையும் வறுமையிலே போயிருக்கும் . "
'என்னடா சோறு இது?'என்று கஸ்டமர் யாரோ சோற்றை வாரி அவன் முகத்தில் அடித்தாற்போன்று உணர்வினை தேசிங்கிற்குள் பரப்பியது ரவியின் வார்த்தைகள்.
"ஆமா ரவி இந்த புத்தியில்லாமதான் நான் படிப்ப ஐஞ்சாவதோட நிறுத்திட்டு எங்க நைனாவோட இந்த ஓட்டலுக்கு வேலைக்கு வந்துடேன் . . . இப்ப பாரு இன்னமும்.. . . நான் "அதற்கு மேல் தேசிங்கால் பேச முடியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
பணி முடிந்ததும் கடைசி பஸ் பிடித்து வீடுவரும்வரை நிலைகொள்ளவில்லை தேசிங்கின் மனது। ஒரு தலைமுறையின் நிலையை தலைகீழாய் புரட்டிப் போட்ட வலிமைமிகுந்த படிப்பையா நிறுத்திவிடச்சொன்னேன் ? நம் கஸ்டகாலம் நம்மோட போகட்டும் கனகசபையின் எதிர்காலம் ஆரோக்கியமானதாக இருக்கட்டும் . படிப்பறிவு இல்லாமல் படுகிற பாடு . . . நாய் பாடாத பாடு. . . அது எம் பையனுக்கும் வேணாம்' என்று தோனிற்று.



வீட்டிற்குள் நுழைந்ததும் தூங்கிகொண்டிருந்த கனகசபையை எழுப்பி, 'ஐ யா ..... இந்தா நீ கேட்ட பொஸ்தக காசு . .. . நீ போய் படிய்யா. . 'என்று சொல்லிக்கொண்டே அவன் தலையை கோதிவிட்டான்.
விடிந்தது . வழக்கம் போல தேசிங்கு வேலைக்கு புறப்பட்டான். "நைனா. . . நீ . கொடுத்த காசு நெசமாவே பொஸ்தகம் வாங்கத்தானா? "கனகசபை கேட்டான்.
"ஆமாங்கண்ணு"தெளிவும் நம்பிக்கையும் இன்று தேசிங்கிற்குள் புதிதாய் துளிர்விட்டிருந்தது எப்படியோ ஒரு தலைமுறையை அறியாமை இருட்டில் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்தது. - புதுவைப்பிரபா-



Monday, October 31, 2011

பொய் சொல்லக்கூடாது அப்பா - சிறுகதை




"வளர்ந்துட்டேயில்ல . .தர்ட் ஸ்டாண்டர்ட் வேற போயிட்ட. . .இனிமே, நீயே, தானா குளிக்க கத்துக்கணும்॥ . சரியா. . ." அம்மா சொன்ன வார்த்தைகளுக்கு முதன்முறையாக உயிர் கொடுக்க, குளியலறைக்குள் நுழைந்தான், ராகுல்.

முதலில் அவன் கண்ணில் பட்ட சோப்பு டப்பாவை எடுத்து, சோப்பை இரண்டு மூன்று முறை திருப்பித்திருப்பி பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அவன் மனது ,அதிகாலையில், அப்பாவும் எதிர்வீட்டு டேனியல் மாமாவும் பேசிக்கொண்டிருந்த நொடிகளுக்கு பின்நோக்கிச் சென்றது।

" ஏன் சார். . .நீங்க எப்பத்தான் உங்க கம்பனியில சீனியர் மேனேஜரா ஆவறது?"
"டேனியல் சார்। . . நான் நெனச்சிருந்தா, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே ஆகியிருக்கலாம். என்ன. . .சோப்பு போட்டிருக்கணும்.மத்தவங்க மாதிரி நானும் சோப்பு போட்டிருந்தேன்னா. . . இந்நேரம் சீனியர் மேனேஜரா என்ன , ரீஜனல்; மேனேஜராகவே ஆகியிருப்பேன். ஏன்ன பண்ணறது? எனக்குன்னு இல்லீங்க. . .எங்க பரம்பரைக்கே சோப்பு போடற பழக்கமே கிடையாது."

மீண்டும் சோப்பை இரண்டுடொருமுறை திருப்பித்திருப்பி பார்த்துவிட்டு, " ச்சே! நம்மல பொய் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டு, இப்போ அப்பாவே இப்படி அப்பட்டமா பொய் சொல்றாரே!" ராகுல் தனக்குள்ளேயே நினைத்துக்கொண்டான்.
விஷயம் விளங்கும்வரையோ,அல்லது யாராவது விளக்கும்வரையோ, அப்பாவை பற்றிய நினைப்பு அவனுக்குள் மாறப்போதவதேயில்லை।

-புதுவைப் பிரபா-

மாற்ற முடியும்




சமைக்கவும் கழுவவும்
பெருக்கவுமே பெண்கள் எனும்
நிலை களைய ஒன்றாய் கூடி

ஊருக்கும் சேரிக்கும் இடையே ஓடும்
சாதி சாளகத்தை
சமத்துவ மண்கொட்டி மூடி

துப்பாக்கித் தோட்டாவும்
வெட்டறுவா வெடிகுண்டும்
நிரந்திரமாய் செயலிழக்கச் செய்து

பொய்- பகட்டு- சூது
வன்கொடுமை இல்லாத
நன்சமூகம் ஒன்று நாம் நெய்து

மாற்றிக்காட்டுவோம்
புவியை மாற்றிக்காட்டுவோம்

மனிதர்களே!
பிரபஞ்சம் தோன்றிய நொடியிலிருந்து
இந்த நொடிவரை
மண்ணில்

மாறாமலே இருப்பது
மாற்றம் மட்டும்தான்

நம்புங்கள். . .
நம்மால் நல்லதாய் உலகை
மாற்றிக்காட்டமுடியும்
இது சத்தியம்
நாம் ஒன்றுகூடி
ஒரே அணியில் நின்றால்
நாளைக்கேகூட இது சாத்தியம்.

-புதுவைப்பிரபா-
(அக்டோபர் மாத இலக்கியபீடம் இதழில் வெளிவந்த கவிதை)

Saturday, March 19, 2011

கடவுள்!

நாற்பத்தெட்டு நாள் விரதமிருந்து
முடி வளர்த்து மொட்டையடித்து
பயபக்தியோடு பொங்கல் வைத்து
நூத்தியெட்டு தேங்காய் உடைத்து
ஆயிரத்தெட்டு முறை மந்திரம் சொல்லி
வடைமாலைச் சாத்தி

நெய்விளக்கு ஏத்தி
காத்துக்கிடக்கிறது

ஒரு பெருங்கூட்டம்-

கடவுளை காண்பதற்காய்!

கண்களை மூடிக்கொண்டு

கடவுளை தேடிக்கொண்டிருக்கும் மனிதா!

ஒரு நிமிடம் காது கொடுத்துக் கேள்!

தன்னை உருக்கி

உன்னை செய்த தாய்
உன்னை செதுக்க

தன்னை சிதைத்துக்கொண்ட தந்தை
மனக்கசூடத்திலிருக்கும்போது

ஊக்க வார்த்தைகளால் உயிர் பாய்ச்சும்

உற்ற துணைவி
பணக்கசூடத்திலிருக்கும்போது

கொடுத்து உதவும்பக்கத்து வீட்டுக்காரன்
உரிய நேரத்தில் ஓடிவந்து உதவி செய்யும்

உறவினன்
தோல்வி தடுக்கி விழும்போது

தோள் கொடுக்கும் தோழன்
பேருந்து பயணத்தில்தவறி விழுந்த பணப்பையை

பத்திரமாய் திருப்பித்தந்தபின் சீட்டுப் பெண்
அவசரவேலையாய்நடந்து சென்று கொண்டிருக்கும்போது

~லிப்ட் கொடுத்தமுகம் தெரியா மனிதன்
இப்படி எண்ணற்றோர்

உருவில்தான்உலவிக்கொண்டிருக்கிறார்।

। ।கடவுள் !

உணர்வாயா மனிதா ?