Sunday, December 27, 2009

வேண்டுகோள்

மரணப்படுக்கையிலே மல்லாந்து படுத்துக்கொண்டு
மூச்சுவிட திணறுதிங்கே உலகம் - காரணம்
சாதிமத பேதமென்னும் கலகம்

கருவிழிகள் நீர்சொரிய காண்கின்றேன் சகமனிதன்
மனிதனையே வெடிவைத்து வெடிக்க - இதயம்
உடல்விட்டு வெளிவந்து துடிக்க

ஊர்போகும் பேருந்தின் உள்ளிருந்து திடுமென்று
தலை ஆறாய் உடல்நூறாய் சிதறும் - குழந்தை
கைபிய்ந்து கால்பிய்ந்து கதறும்

பழிவாங்கும் நோக்கோடு பைத்தியம்போல் அலைகின்றார்
அப்பாவிகளை வெறிகொண்டு தாக்க - இங்கு
யாருமில்லை மனிதநேயம் காக்க

ஒப்பாரிக்கு ஓய்வு தர உறுதிகொள் மனிதா
வெடிவைக்கும் மனப்போக்கை அழிக்க - இனி
அமைதிகொள் புவிப்பந்து செழிக்க

முயன்றால் முடியாதது ஏதுமில்லை தெரியாதா
மனது வை மனிதா அஃது முடியும் - நாளை
வன்முறையற்ற உலகம் விடியும்

மாந்த சமதளத்தில் வகுப்பின வரப்புகளை
அமைத்தபடி பிரிவினைகள் எதுக்கு - தகர்த்து
ஒற்றுமை சமபரப்பை செதுக்கு

பாபரோ ராமரோ பெயர் பிரித்து பார்க்காமல்
நட்பு கொண்டு நெஞ்சோடு இறுக்கு - உலகம்;
உய்த்தலில் உன் பங்கும் இருக்கு.

-புதுவைப் பிரபா -

நன்றி-புதுவை பாரதி இதழில் 2009ஆம் ஆண்டு வெளிவந்த படைப்புகளில் சிறந்த படைப்பென பரிசுக்கும் பாராட்டிற்கும் தேர்வு பெற்ற கவிதை

1 comment:

  1. ஒற்றுமை சமபரப்பை செதுக்கு
    அருமை பிரபா
    தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete