Wednesday, October 31, 2012

விவாகரத்து செய்யுங்கள்



அவசர உலகின்
நவீன வாழ்க்கைமுறை
நம்பிக்கையில்லா தீர்மானம்
கொண்டுவந்துவிட்டபடியால்
குடும்ப நீதிமன்ற வளாகங்களில்
வரிசையாய் நிற்கிறது
திருமணங்கள்

குறட்டைவிடுகிறார் என்ற
குற்றச்சாட்டை முன்வைத்து
விவாகரத்து கோரும் மனைவி-
அரட்டை அடிக்கிறாள் என்ற
ஆதங்கத்தோடு
பிரித்துவைக்கச் சொல்லும் கணவன்-
தொலைக்காட்சி பார்க்கும் தகராறில்
தொடர்பை முறித்துக்கொள்ள நினைக்கும் இருவர்
" பீட்சா " பிரச்சனையில்
பிரிந்துவிட நினைக்கும் இணையர்

இன்னும்..இன்னும்…

இப்படிப்பட்டவர்களால்
அவமானப்பட்டு நிற்கிறது திருமணங்கள்.

அட..அவசரத்திற்கு பிறந்தவர்களே..!!!

திருமணம் என்பது
வெறும் வார்த்தையென்று நினைக்காதீர்
வாழ்க்கையென்று நினையுங்கள்.
ஆணவம் அகங்காரம் தவிர்த்து
மனதால் ஒன்றிணையுங்கள்

சுயநலம் என்னும் சொல்லை
தயவுசெய்து மறந்துவிடுங்கள்
தொண்ணூறு விழுக்காடாவது
உண்மையாய் இருந்துவிடுங்கள்

நல்லதானால் " நான் " காரணம்
கெட்டதானால் " நீ " காரணம் 
என்று பேசுவதை தவிர்த்து
எதற்கும் " நாம் " காரணம் 
என்று பேசுங்கள்
குடும்பத்திற்கு
" தற்பெருமை " ஆகாது
அதை தூக்கி தூர வீசுங்கள்

விவாகரத்து என்னும் வார்த்தையை
விவாகரத்து செய்யுங்கள்
புரிந்துணர்வோடு வாழ்க்கை நடத்தி
உங்கள் திருமணத்தை வாழவையுங்கள்

புதுவைப்பிரபா

2 comments:

  1. அருமையான கருத்துக்கள்...

    ReplyDelete
  2. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி..நன்றி..

    ReplyDelete