Saturday, September 13, 2014

பிரியும் வரம் வேண்டும்



என் இருத்தலை
இல்லாமலாக்கும் மரணம்
எப்படியும் வரலாம்

பயண விபத்தில்
மண்டை நசுங்கி
குருதியோடு மூளையும்
வெளி வழிந்தோ...
அல்லது
வெடிகுண்டில் சிக்கி
உடல் பிய்ந்து
குடல் சிதறியோ...

அறிந்தவர்களின் ஆத்திரத்தால்
அல்லது
அறிந்திராதவர்களின் அவசரத்தால்
கழுத்தறுபட்டோ
அல்லது
துப்பாக்கியால் சுட்டோ...

மருத்துவத்திற்கு கட்டுப்படாத
புற்றுநோயாலோ
அல்லது
தொற்றுநோயாலோ...

கவனக்குறைவால்
மலையிலிருந்து கால் இடறியோ
அல்லது
நீர்நிலைக்குள் மூச்சுத்திணறியோ...

அவமானத்தின் ஆணைக்கு
அடிபணிந்து
அல்லது
வெறுப்பின் உச்சத்தில்
மதி இழந்து
கோழைத்தனமான
தற்கொலையினாலோ...

மரணம் எனக்குள்
ஒருநாள் தோன்றும்

ஆனால் என் ஆசையெல்லாம்-
இதுபோன்று ஒரு
கவிதை எழுதிக்கொண்டிருக்கும்போதே
எந்தன் உயிர் பிரிந்துவிட வேண்டும்.

----------------------------------------------
புதுவைப் பிரபா

2 comments: